Published : 27 Dec 2018 10:00 AM
Last Updated : 27 Dec 2018 10:00 AM
அசாம் மாநிலத்தில் உள்ள பக்சா மாவட்டத்தில் பன்றி, கோழி இறைச்சியை மக்கள் விரும்பி சாப்பிடுவதைக் காட்டிலும், எலிக் கறி மீதுதான் மோகம் அதிகரித்துள்ளது.
குவஹாட்டியில் இருந்து 90 கி.மீ. தொலைவில் இந்திய - பூட்டான் எல்லை அருகே இருக்கும் குமாரிகட்டா வாரச்சந்தையில் எலிக்கறி கிலோ ரூ.200க்கு விற்பனையாகிறது.
‘ஃபிரஷ்’ எலிக்கறி, வேகவைக்கப்பட்ட எலிக்கறி, தோல் உரிக்கப்பட்ட எலிக்கறி போன்றவை வகை வகையாக விற்கப்படுவதால் மக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.
அசாம் மாநிலத்தின் நல்பாரி, பார்பேட்டா, குமாரிக்கட்டா மாவட்டங்களில் பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள், உள்ளிட்ட பல்வேறு சமூக மக்களின் பாரம்பரிய உணவாக எலிக்கறி இருப்பதால், இதை மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
எலிக்கறி விற்பனை சூடுபிடித்து இருப்பதால், கோழிக்கறி, பன்றிக்கறி விற்பனை மந்தமாகியுள்ளது என்று இறைச்சி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குமாரிக்கட்டா பகுதியில் உள்ள விளைநிலங்களில் புகுந்து எலிகள் தானியங்களை அழித்து வருகின்றன. இதைத் தடுப்பதற்காக எலி பிடிப்பவர்களை விவசாயிகள் நியமிக்கின்றனர்.
எலி பிடிக்கும் பழங்குடி, ஆதிவாசி மக்கள், இரவு நேரத்தில் வயலுக்குச் சென்று, வளையில் இருந்து வெளியே வரும் எலிகளை லாவகமாகப் பிடித்து விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.
ஆதிவாசி சமூகத்தினர் மட்டும் இந்த எலி பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். தேயிலைத் தோட்டங்களில் கூலி வேலை செய்யும் ஆதிவாசி மக்கள், கூடுதல் ஊதியத் தேவைக்காக இதுபோன்ற எலி பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து எலிக்கறி விற்பனையாளரான சம்ரா சோரன் கூறுகையில், “ சமீபகாலமாக வயல்களை நாசம் செய்யும் எலிகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. நெல் வயல்களை நாசம் செய்யும் எலிகளைப் பிடிக்க விவசாயிகள் எங்களிடம் கூறுகின்றனர். அவர்களுக்கு உதவ, இரவு நேரத்தில் மூங்கில் மூலம் அமைக்கப்பட்ட எலி பிடிப்பான் மூலம் எலிகளைப் பிடிக்கிறோம். எலி பிடிக்கச் சென்றால், ஒருநபர் நாள் ஒன்றுக்கு 20 முதல் 30 கிலோ எலிகள் வரை பிடித்து வருகிறோம். சில நேரத்தில் ஒரு எலி ஒரு கிலோவுக்கும் அதிகமான எடையில் இருக்கும். இதை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT