Published : 09 Dec 2018 08:57 AM
Last Updated : 09 Dec 2018 08:57 AM
ராஜஸ்தானில் வாக்குப்பதிவு இயந்திரம் சாலையில் கேட்பாரற்று கிடந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அதற்கு காரணமான 2 தேர்தல் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் உள்ள 199 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
இந்நிலையில், ராஜஸ்தானின் பரான் மாவட்டத்தில் உள்ள சாஹாபாத் பகுதியில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம் சாலையில் கேட்பாரற்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸார், வாக்குப்பதிவு இயந்திரத்தை கைப்பற்றியதுடன் தேர்தல் ஆணையத்துக்கும் தகவல் அளித்தனர். இதையடுத்து, தேர்தல் அதிகாரிகள் அங்கு சென்று அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை பத்திரமாக கொண்டு சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அப்துல் ரபீக், நவால் சிங் பத்வாரி ஆகிய 2 தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நேற்று இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT