Published : 09 Sep 2014 04:53 PM
Last Updated : 09 Sep 2014 04:53 PM
சீன அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவர் அந்நாட்டின் அதிபரான பிறகு இந்தியாவில் மேற் கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இதுவாகும். இந்தியாவுக்கு வருவ தற்கு முன்பு தஜிகிஸ்தான், மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு ஜி ஜின்பிங் செல்லவுள்ளார்.
எல்லைப் பிரச்சினையால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த மாதம் காஷ்மீரின் லடாக் பகுதியில் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. இதனால், இருதரப்பு உறவில் பாதிப்பு ஏற்பட்டது.
எனினும், இருதரப்பு வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 70 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்நிலையில் சீன அதிபரின் வருகை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
மத்தியில் புதிய ஆட்சி ஏற்பட்ட பிறகு கடந்த ஜூன் மாதம் இந்தியாவுக்கு வந்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி, இருநாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.கடந்த ஜூலை மாதம் பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தியாவில் சீன முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டார்.
அதே சமயம், சமீபத்தில் ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற் கொண்ட மோடி, சீனாவின் ஆக்கிரமிப்பு மனப்பான்மையை மறைமுகமாக கண்டித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT