Last Updated : 18 Dec, 2018 01:35 PM

 

Published : 18 Dec 2018 01:35 PM
Last Updated : 18 Dec 2018 01:35 PM

மறுப்பு, போராட்டம், அனுமதி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்த திருநங்கைகள்

சபரிமலை ஐயப்பயன் கோயிலுக்கு இருமுடி கட்டி தரிசனம் செய்ய வந்த திருநங்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இன்று போலீஸ் பாதுகாப்புடன் தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டுள்ளது. அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சபரிமலையில் போலீஸார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு 144-தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது

இந்நிலையில், கோட்டயம், மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்கு இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்கச் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) சென்றனர். அவர்கள் எரிமேலி வழியாகப் பம்பைக்கு அதிகாலை 1.30 மணிக்குச் செல்ல முயன்றனர்.

அப்போது, போலீஸார் அவர்கள் 4 பேரையும் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது, அவர்களின் பெயர் அனன்யா, திருப்தி, அவந்திகா, ரஞ்சு ஆகியோர் என்பதும், இவர்கள் 4 பேரும் கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், தாங்கள் முறைப்படி விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வந்துள்ளோம் என்று திருநங்கைகள் போலீஸாரிடம் தெரிவித்தனர். ஆனால் திருநங்கைகளை சபரிமலை கோயிலுக்கு அனுமதித்து அங்கிருக்கும் சிலர் இவர்களை மறித்து போராட்டம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் என்று கருதினார்கள்.

இதையடுத்து, திருநங்கைகள் 4 பேரும் சபரிமலை செல்வதற்கு போலீஸார் அனுமதி மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், திருநங்கைகள் ஏன் சபரிமலைக்கு செல்லக்கூடாது, உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ளதே என் கேள்வி எழுப்பியதற்குச் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் எனக் கூறி அவர்களைப் பாதுகாப்புடன் எரிமேலிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் கோட்டயத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைத்தனர்.

 

திருநங்கைகள் சேலை அணிந்திருப்பதால், கோயிலுக்கு அனுமதிக்க முடியாது ஆதலால்ஆண்கள் உடையில் பேண்ட், சட்டை அணிந்தபின்பு வாருங்கள் என்று போலீஸார் அவமதிப்பு செய்தனர் என்று திருநங்கைகள் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் திருநங்கைகள் நான்கு பேரும், உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட மூவர் குழுவில் உள்ள போஸீஸ் டிஜிபி ஹேமச்சந்திரனை நேற்றுச் சந்தித்து முறையிட்டு தங்களுக்கு சபரிமலைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக வேதனைத் தெரிவித்தனர்.

இதையடுத்து, கோயில் தந்திரிகள் மற்றும் பந்தளம் மன்னர் குடும்பத்தாரிடம் ஹேமச்சந்திரன் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அவர்களின் அனுமதியின் பெயரில் திருநங்கைகள் 4 பேரையும் சாமி தரிசனம் செய்ய சம்மதித்தனர்.

எர்ணாகுளத்தில் இருந்து எருமேலிக்கு இன்று அதிகாலை வந்த 4 திருநங்கைகள் இன்று காலை பம்பைக்கு சென்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை சேலை அணிந்து செல்லக்கூடாது என்று போலீஸார் தெரிவித்த நிலையில் இன்று திருநங்கைகள் சேலை அணிந்து சபரிமலைக்கு காலை 8 மணிக்கு பம்பையில் இருந்து புறப்பட்டனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சன்னிதானத்துக்கு அழைத்துச்செல்லப்பட்ட திருநங்கைகள் நான்கு பேரும், 9.45 மணிக்கு 18 படிகளில் ஏறி சாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். அதன்பின் அங்கிருந்து அவர்கள் பாதுகாப்புடன் பம்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x