Last Updated : 28 Dec, 2018 04:29 PM

 

Published : 28 Dec 2018 04:29 PM
Last Updated : 28 Dec 2018 04:29 PM

விவசாயிகளுக்குப் புத்தாண்டு பரிசு?: வட்டியில்லாக் கடன், பயிர் காப்பீடு பிரிமியம் தள்ளுபடி: மத்திய அரசு திட்டம்

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் கோபத்தைத் தணிக்கும் வகையில் வட்டியில்லாக் கடன், பயிர்க்கடனுக்கு ப்ரிமியம் தள்ளுபடி போன்ற திட்டங்களை அறிவிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

வங்கியில் கடன் பெற்று முறையாகச் செலுத்தி வரும் விவசாயிகளுக்கு வட்டி முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், உணவு தானிய பயிர்களைக் காப்பீடு செய்திருந்தால் அதற்குரிய ப்ரிமியம் தொகையை தள்ளுபடிசெய்யவும், தோட்டக்கலை பயிர்களுக்கு ப்ரிமியம் தொகையை பாதியாகக்குறைக்கவும் ஆலோசித்து வருகிறது மத்திய அரசு.

சமீபத்தில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியைப் பறிகொடுத்தது பாஜக. இந்த மாநிலங்களில் ஆட்சி பறிபோனதற்கு முக்கியக் காரணம் விவசாயிகளின் அரசு மீது கொண்டிருக்கும் அதிருப்தி முக்கியக் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, விவசாயிகளை திருப்திப்படுத்தவும், எதிர்வரும் மக்களவை தேர்தலைச் சந்திக்கவும் இந்த அறிவிப்பை வெளியிட மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த திட்டம் தொடர்பாகக் கடந்த சில நாட்களாக மத்திய அரசு உயர் மட்ட அளவில் பல்வேறு ஆலோசனைகளையும், பலசுற்றுப் பேச்சுக்களையும், சாதக, பாதகங்களையும் விவாதித்துள்ளது. அதில் விவசாயிகள் சந்தித்துவரும் பிரச்சினைகள், விளைபொருட்களுக்கு விலை கிடைக்காதது, கடன் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விவசாயிகளுக்கு முதல்கட்டமாக நிவாரணம் வழங்கும் வகையில், வங்கியில் பெற்ற கடனுக்குத் தொடர்ந்து முறையாகச் செலுத்தி வரும் விவசாயிகளுக்கு வட்டியில் 4 சதவீதத்தை உடனடியாக தள்ளுபடி செய்து அறிவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தற்போது விவசாயிகளுக்குக் குறுகிய காலக் கடனாக ரூ.3 லட்சம் வரை 7 சதவீத வட்டியில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சரியாக கடனைச் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீதம் வட்டி தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இப்போது, மீதமுள்ள 4 சதவீதத்தையும் தள்ளுபடியாக அளிக்க அரசு ஆலோசித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் கோடி கடன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. வழக்கமாக வட்டி தள்ளுபடி மூலம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு வருகிறது. இப்போது இந்த வட்டித் தள்ளுபடியையும் சேர்த்தால் அரசுக்கு ரூ.30 ஆயிரம் கோடியாக சுமை அதிகரிக்கும்.

மேலும் பிரதான் மந்திரி பைசல் பிமா யோஜனா திட்டம் மூலம் விவசாயிகளின் பிரிமியம் சுமையை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நெல், கோதுமை உள்ளிட்ட உணவுப்பயிர்களுக்கு பிரியம் தொகை முழுவதையும் தள்ளுபடி செய்யவும், தோட்டக்கலைப் பயிர்களுக்குபிரிமியம் தொகையை பாதியாகக் குறைக்கவும் ஆலோசித்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x