Published : 04 Dec 2018 01:09 PM
Last Updated : 04 Dec 2018 01:09 PM
மும்பை திந்தோஷியில், கோரேகான் கிழக்குப் பகுதியில் உள்ள ஆரே காலனியில் திங்கட்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு வசித்து வந்த பழங்குடியினரும் அவர்களது கால்நடைகளும் பத்திரமாக வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திங்கள் இரவில் இருந்து 10 தீயணைப்பு எந்திரங்களும் 7 தண்ணீர் டேங்குகளும் சம்பவ இடத்தில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இதுகுறித்து தலைமை தீயணைப்பு அதிகாரி பிஎஸ் ரஹாங்டேல் கூறும்போது, ''திங்கள் மாலை சுமார் 6.21 மணிக்கு தீப்பிடித்துள்ளது. 8 மணிக்கு தீ விபத்து பெரிதாகியுள்ளது.
வனப்பகுதியில் சுமார் 3 - 4 கி.மீ. தூரத்துக்கு நெருப்பு பரவி, அங்கிருந்த மரங்கள் மற்றும் காய்ந்த சருகுகளில் பரவியது. இந்நிலையில் நெருப்பை அணைக்கத் தீவிரமாக முயன்று வருகிறோம்.
அடர்ந்த வனப்பகுதி என்பதால், தீயணைப்பு வாகனங்கள் செல்ல முறையான பாதைகள் இல்லை. இப்பகுதிகளில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதத்தில் லேசான தீ விபத்து ஏற்படும். ஆனால் இந்த முறை தீ அதிக தூரத்துக்குப் பரவியுள்ளது.
பெரிய மரங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் வனப்பகுதிக்கு மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT