Last Updated : 01 Dec, 2018 05:07 PM

 

Published : 01 Dec 2018 05:07 PM
Last Updated : 01 Dec 2018 05:07 PM

பிஹாரில் மதுவிலக்கை தீவிரமாக அமலாக்க 20 மோப்ப நாய்களை அமர்த்துகிறார் நிதிஷ் குமார்

மதுவிலக்கை அமலாக்குவதில் பிஹார் போலீஸார் மீது அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் நம்பிக்கை இழந்திருப்பதாகத் தெரிகிறது. இதைச் சமாளிக்க 20 மோப்ப நாய்கள் பணியமர்த்தப்பட உள்ளன.

கடந்த 2015 சட்டப்பேரவை தேர்தலில் வென்று மூன்றாம் முறையாக முதல்வரான நிதிஷ் குமார், அம்மாநிலத்தில் தீவிர மதுவிலக்கை அமலாக்கினார். இதற்கு பிஹார் போலீஸின் ஒத்துழைப்பு சமீபகாலமாகக் குறைந்து வருவதாகக் கருதப்படுகிறது.

அண்டை நாடான நேபாளில் இருந்து கடத்தப்படும் மது மற்றும் போதைப் பொருட்கள் அதிகமாகி வருகிறது. இதற்காக, அதன் வாகன ஓட்டுநரும், கடைநிலை ஊழியர்களும் கைதாகின்றனரே தவிர, முக்கியக் குற்றவாளிகள் பிடிக்கப்படுவதில்லை. இதனால், போலீஸாரை நம்பி இனி பயனில்லை என நிதிஷ் குமார் கருதி விட்டார். இதன் மாற்று முயற்சியாக நிதிஷ், 20 மோப்ப நாய்களை மாநில அரசு சார்பில் வாங்கியுள்ளார். கடந்த ஜூலையில் அவை ஆறு மாதக் குழந்தையாக இருக்கும் போது ரூ.35 லட்சம் விலை கொடுத்து வாங்கியுள்ளார்.

இவற்றின் பயிற்சியாளர்களுக்கும் சேர்த்து தெலங்கானாவின் மொய்னாபாத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சிகள் முடிந்த பின் அடுத்த வருடம் பிப்ரவரி முதல் பிஹாரில் மதுவிலக்கு அமலாக்கும் பணியில் மோப்ப நாய்களும் ஈடுபடும்.

இது குறித்து ‘இந்து தமிழ்’ இணையதளத்திடம் பிஹார் மாநிலக் காவல்துறையின் கூடுதல் இயகுநர் ஜெனரல் வினய்குமார் கூறும்போது, ''சிறிய அளவில் மது, போதை மருந்துகளை உண்டவர்களையும், அப்பொருட்களை மிக ஆழமாகப் புதைக்கப்பட்டாலும் இந்த மோப்ப நாய்கள் கண்டுபிடித்து விடும். அதற்குரிய பயிற்சி  அளிக்கப்பட்டு வருகிறது'' எனத் தெரிவித்தார்.

இதுபோல், மதுவிலக்கு மற்றும் போதை தடுப்புப் பணியில் மோப்ப நாய்களைப் பயன்படுத்துவது பிஹாரில் முதன்முறை. முதல்கட்டமாக இவை அம்மாநில எல்லைப்புறச் சோதனைச் சாவடிகளில் அமர்த்தப்பட உள்ளன. அதன் பிறகு முக்கிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x