Published : 21 Dec 2018 09:39 PM
Last Updated : 21 Dec 2018 09:39 PM
பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஒ.என்.ஜி.சி.யின் எண்ணெய்க்கிணறு ஒன்று ஆந்திராவில் நடுக்கடலில் ஒருபக்கமாகச் சாய்ந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை நேர் செய்ய கப்பற்படை ஹெலிகாப்டர் பணிக்கப்பட்டுள்ளது. பெய்ட்டி புயலினால் இது ஒரு பக்கமாகச் சாய்ந்திருக்கிறது என்று இந்தியக் கப்பற்படையினர் தெரிவித்தனர்.
இது குறித்து நேவி செய்தித் தொடர்பாளர் தன் ட்விட்டரில், “ஒலிந்தா ஸ்டார் என்ற எரிவாயுக் கிணறு கிருஷ்ணா கோதாவரி பேசினில் நடுக்கடலில் ஒரு பக்கமாகச் சாய்ந்து கடலில் லேசாக மூழ்கியது. பெய்ட்டி புயல் உருவானதையடுத்து விடுக்கப்பட்ட எச்சரிக்கையினால் அங்கு பணியாற்றியவர்கள் கரை திரும்பினர். ஒலிந்தா ஸ்டார் அதன் பிறகு ஒருபக்கமாகச் சாய்ந்திருந்தது, இது பெய்ட்டி புயலினால் இருக்கலாம், கொஞ்சம் சேதமும் ஏற்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
வங்காளவிரிகுடாவில் காக்கிநாடா, ஏனாம் இடையே நடுக்கடலில் உள்ளது ஓ.என்.ஜி.சி எண்ணெய்க்கிணறு, இது ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான கிணறாகும். ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் இது குறித்துக் கூறும்போது, வங்கக்கடலில் ‘ஒலிந்தா ஸ்டார்’ என்ற இந்தக் கிணற்றை நிறுவியவர்கள் பிரேசில் நிறுவனத்தினர். அந்த நிறுவனம்தான் இதனை நடத்தி, செயல்படுத்தி, பராமரித்தும் வருகிறது. இதில் சுமார் 120 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆனால் கடந்த வாரம் கடும் புயல் எச்சரிக்கையினால் இந்த எண்ணெய்க் கிணறு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டு அனைவரும் கரைக்குத் திரும்பினர். ஆனால் பெய்ட்டி புயலுக்குப் பிறகு ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் கிணறு சாய்ந்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர், பிறகு அதைச் சரிசெய்யுமாறு அறிவுறுத்தினர்.
“பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. கிணற்றின் செயல்பாடுகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கி விடும் என்று ஓ.என்.ஜி.சி, மூத்த அதிகாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT