Last Updated : 12 Dec, 2018 04:47 PM

 

Published : 12 Dec 2018 04:47 PM
Last Updated : 12 Dec 2018 04:47 PM

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ், இதர கட்சிகளிடம் பாஜக பறிகொடுத்த வாக்குகள் அதிகம்

மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் வாக்குகளை காங்கிரஸுடன் சேர்த்து இதர கட்சிகளும் பறித்திருப்பது தெரியவந்துள்ளது. மத்திய தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரத்தின்படி பாஜக 2014 தேர்தலுக்கு பின் அதிக சதவிகித வாக்குகளை இந்தமுறை இழந்துள்ளது.

 

ராஜஸ்தான், மபி மற்றும் சத்தீஸ்கரில் பாஜக தன் ஆட்சியை இழந்துள்ளது. இங்கு பாஜக வாக்குகளை பெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது. இங்கு பாஜகவின் வாக்குகளை இதர கட்சிகளும் அதிக அளவில் பெற்றுள்ளன.

 

சத்தீஸ்கரில் 43.2 சதவிகித வாக்குகளை காங்கிரஸ் பெற்றுள்ளது. இதற்கு கடந்த தேர்தலில் 40.3 சதவிகிதம் கிடைத்திருந்தது. 2014 மக்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு 38.37 சதவிகிதம் கிடைத்திருந்தது. இம்மாநிலத்தின் 11 மக்களவை தொகுதிகளில் ஒன்று மட்டுமே காங்கிரஸ் பெற்றிருந்தது.

 

சத்தீஸ்கரின் இந்த புள்ளிவிவரத்தை பாஜகவுடன் ஒப்பிட்டால் அக்கட்சிக்கு காங்கிரஸை விட அதிகமான இழப்பு இந்தமுறை ஏற்பட்டுள்ளது. 2013-ல் 40.3 பெற்ற பாஜக இந்தமுறை தேர்தலில் 32.9 சதவிகிதம் மட்டுமே பெற்றுள்ளது. இக்கட்சிக்கு மக்களவை தேர்தலில் 49 சதவிகித வாக்குகளுடன் 10 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருந்தன.

 

பாஜகவின் வாக்கு சதவிகிதத்தின் ஒருபகுதி சத்தீஸ்கரில் கூட்டணி வைத்த போட்டியிட்ட கட்சிகளான பகுஜன் சமாஜுக்கு 4.3, சத்தீஸ்கர் காங்கிரஸுக்கு 10.7 கிடைத்துள்ளன. சுயேச்சைகளும் 2013-ல் பெற்ற 5.3 ஐ விட அதிகமாக தற்போது 6.3 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளனர்.

 

ராஜஸ்தானில் பாஜக வாக்குகள் சதவிகிதம் 45.2-ல் இருந்து 38.8 எனக் குறைந்து விட்டது. இந்த எண்ணிக்கை 2014 மக்களவை தேர்தலில் மிக அதிகமாக 55 சதவிகிதம் இருந்தன. இங்கு மொத்தம் உள்ள மக்களவை தொகுதிகள் 25-ம் பாஜக பெற்றிருந்தது.

 

இதே மாநிலத்தில் காங்கிரஸுக்கு இருந்த 33.1 சதவிகித வாக்குகள் தற்போது 39.2 என உயர்ந்துள்ளது. இக்கட்சிக்கு மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியும் கிடைக்காவிட்டாலும் 30 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது. இதர கட்சிகளுக்கு இருந்த 8.2 சதவிகிதமாக வாக்குகள் 9.5 என உயர்ந்துள்ளன.

 

மபியில் பாஜக, காங்கிரஸுக்கு இடையே மிக நெருக்கமான சதவிகித வித்தியாசத்தில் போட்டி இருந்துள்ளது. இங்கு 2013-ல் காங்கிரஸுக்கு இருந்த 36.4 இந்தமுறை 41.4 சதவிகிதமான உயர்ந்துள்ளன. இது பாஜகவிற்கு 44.9-ல் இருந்து 41.3 என குறைந்துள்ளது.

 

மபி மாநிலத்தில் தனித்து போட்டியிட்ட பகுஜன் சமாஜுக்கு வாக்குகள் இந்தமுறை சதவிகிதம் குறைந்துள்ளது. சுயேச்சைகள் பெற்றிருந்த ஐந்து சதவிகிதவாக்குகளில் எந்த மாற்றமும் தற்போதைய தேர்தல் முடிவில் ஏற்படவில்லை. எனினும், மற்ற சில இதர கட்சிகள் சில சதவிகித வாக்குகளை பாஜகவிடம் இருந்து தட்டிப் பறித்துள்ளன.

 

கடந்த 2013 முதல் பாஜகவின் வாக்குகளின் எண்ணிக்கை வட இந்திய மாநிலங்களில் உயர்ந்தபடி இருந்தன. இந்த மூன்று மாநில மக்களவை தொகுதிகள் 65-ல் 62-ஐ பாஜக பெற்றிருந்தது. தற்போது குறைந்து விட்ட வாக்குகள் சதவிகிதம் மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு பெரும் சவாலாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x