Published : 31 Dec 2018 05:44 PM
Last Updated : 31 Dec 2018 05:44 PM
சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான சஜ்ஜன் குமார், டெல்லி உயர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பெருநகர குற்றவியல் நடுவர் அதிதி கார்க் முன்னாள் அவர் ஆஜரானார்.
என்ன நடந்தது?
கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப் பட்டார். அவர் சீக்கியக் காவலர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் உள்ளிட்டோருக்கு எதிராகப் புகார் எழுந்தது.
முன்னாள் எம்.பி.யான சஜ்ஜன் குமார் மீது மேற்கு டெல்லியில் உள்ள ஜானக்புரி, விகாஸ்புரி ஆகிய காவல் நிலையங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
விசாரணை நீதிமன்றத்தில் அவர் மீதான குற்றச்சாட்டு ரத்து செய்யப்பட்டது. காங்கிரஸ் கவுன்சிலர் கோஹர் உள்ளிட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம், சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் சஜ்ஜன் குமார் குற்றவாளி என அறிவித்ததோடு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சஜ்ஜன் குமார் சரண் அடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதனையடுத்து சொத்துகளைப் பிரித்துக் கொடுக்க கால அவகாசம் வேண்டும் என்று சஜ்ஜன் குமார் கோரிக்கை விடுத்தார். கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாததால், சஜ்ஜன் குமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று (டிச. 31) சரணடைந்தார்.
முன்னதாக குற்ற வழக்கில் தண்டனை பெற்றதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சஜ்ஜன் குமார் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT