Published : 16 Nov 2018 01:47 PM
Last Updated : 16 Nov 2018 01:47 PM

‘‘சபரிமலை செல்லாமல் திரும்ப மாட்டேன்’’ - திருப்தி தேசாய் பிடிவாதம் - திருப்பியனுப்ப பாஜக 3 மணிநேர கெடு

சபரிமலை செல்வதற்காக கொச்சி விமான நிலையம் வந்துள்ள  பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய், திரும்பிச் செல்லுமாறு போலீஸார் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்து விட்டார். அவரை கைது செய்து 3 மணிநேரத்துக்குள் திருப்பி அனுப்பவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல 10 வயது முதல் 50 வயது வரையி லான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப் பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம், அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். இந்து அமைப் பினரின் கடும் எதிர்ப்பு காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.

ஒரு பெண் கூட ஐயப்பனை தரிசிக்கவில்லை. இந்தப் பின்னணியில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை ஜனவரி 22-ம் தேதி முதல் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், முந்தைய தீர்ப்பு தற்போது அமலில் இருப்பதால் அதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்தநிலையில், பாலின சமத்துவ ஆர்வலர் திருப்தி தேசாய் மற்றும் அவரது சக ஆர்வலர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.40 மணியளவில் புனேயில் இருந்து கொச்சி வந்து சேர்ந்தனர். அவர்களை வெளியே வரவிடாமல், பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.

இதனால் விமான நிலையத்திலிருந்து அவர்களால் வெளியே வர முடியவில்லை. விமான நிலையத்துக்கு வெளியே  போராட்டம் நடந்து வருவதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அங்கிருந்து திருப்பிச் செல்லுமாறு திருப்தி தேசாயை போலீஸார் கேட்டுக் கொண்டனர். ஆனால் ஐயப்பன் கோயிலுக்கு செல்லாமல் திரும்ப மாட்டேன் எனக் கூறி அவர் மறுத்து விட்டார்.

இதுகுறித்து கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில் ‘‘திருப்தி தேசாய் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவரை திரும்பிச் செல்லுமாறு காங்கிரஸ் கட்சி வலியுறுத்த வேண்டும். இந்த பிரச்சினையை வைத்து அரசியல் செய்ய பாஜக எண்ணுகிறது’’ எனக் கூறினார்.

இதுகுறித்து கேரள மாநில பாஜக துணைத் தலைவர் ராதா கிருஷ்ணன் கூறியதாவது:

‘‘சபரிமலை பக்தர்களின் உணர்வுகளை மீறி திருப்தி தேசாய் அங்கு செல்வதை ஏற்க முடியாது. இந்த பிரச்சினைக்கு 3 மணி நேரத்துக்குள் கேரள அரசு தீ்ர்வு காண வேண்டும். அவரை கைது செய்து புனேவுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். இல்லையொன்றால் மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

திருப்தி தேசாயை கேரளாவுக்கு வருமாறு அழைத்தவர் முதல்வர் பினராயி விஜயன் தான். திருப்தி தேசாய் மூலம் கேரளாவில் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சியில் அவரும் இறங்கியுள்ளார். திருப்தி தேசாய் ஐயப்ப பக்தர் அல்ல.  அவர் குழப்பத்தை விளைவிக்கும் நோக்குடன் சபரிமலை செல்ல முயலுகிறார். அவரை அனுமதிக்க முடியாது’’ எனக் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x