Last Updated : 09 Nov, 2018 08:45 AM

 

Published : 09 Nov 2018 08:45 AM
Last Updated : 09 Nov 2018 08:45 AM

உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக டெல்லி தவிர வட மாநிலங்களில் வழக்கு பதிவு இல்லை

தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும், அதன் நேரத்தை மாநில அரசுகளே தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தமிழகத்தில் காலையும், மாலையும் ஒரு மணி நேரம் பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், பெரும்பாலான வட மாநில அரசுகள் இதுபோன்ற அறிவிப்பை வெளியிடவில்லை. இந்நிலையில், டெல்லியை தவிர பெரும்பாலான மாநிலங்களில் நள்ளிரவு வரையும் வழக்கம்போல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், நேரக் கட்டுப்பாட்டை மீறியதாக ஒரு வழக்கு கூடப் பதிவானதாகத் தெரியவில்லை. டெல்லியில் மட்டும் புகார்களின் பேரில் 643 வழக்குகள் பதிவாகி உள்ளன. 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உத்தரபிரதேச அரசு உயரதிகாரிகள் வட்டாரம் கூறியதாவது:பட்டாசு தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை கடைப்பிடிக்க வேண்டும் என எங்களுக்கு உள்துறை செயலாளரின் சுற்றறிக்கை வந்தது. அதேசமயம், பண்டிகை நாட்களில் வழக்குகள் பதிவு செய்து பொதுமக்களை துன்புறுத்த வேண்டாம் என அதிகாரபூர்வமற்ற தகவலும் கிடைத்தது எனத் தெரிவித்தனர்.

மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் அங்கு நடத்தை விதிமீறல்கள் அமலுக்கு வந்துள்ளது. அதனால் நேரக் கட்டுப்பாடு ஓரளவிற்கு கடைப்பிடித்ததாக தெரிகிறது.

எனினும், தேர்தல் நடைபெறவுள்ள ராஜஸ்தானில் நேரக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காமல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. மலைப்பிரதேசமான உத்தராகண்டில் வழக்கமாகவே பட்டாசு அதிகம் வெடிக்கும் வழக்கம் கிடையாது. இதனால், அங்கு நேரக்கட்டுப்பாட்டின் தாக்கம் பெரிதாக தெரியவில்லை. பிஹார் மற்றும் ஜார்க்கண்டிலும் மேற்குறிப்பிட்ட உத்தரவை மீறி வழக்கம் போல பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. ஆனால், பஞ்சாபில் மட்டும் பட்டாசுகள் குறைவாகவே வெடிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x