Published : 25 Nov 2018 11:00 AM
Last Updated : 25 Nov 2018 11:00 AM
மத்தியப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வாகனத்தில் இருந்து கீழே இறங்கும்போது திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் வரும் 28-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் மத்தியப்பிரதேசம் சிவபுரி மாவட்டம், அசோக்நகரில் நேற்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அசோக்நகரில் உள்ள துளசி பார்க் பகுதியில் வாகனத்தில் நின்றவாறே பாஜக தலைவர் அமித் ஷா தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், “ மத்தியப்பிரதேசத்தில் வரும் 28-ம் தேதி நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் கனவு காண்கிறார்கள்.
இந்த மாநிலத்தில் பாஜக 2003-ம் ஆண்டில் இருந்து ஆட்சியில் இருக்கிறது. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த 2005-ம் ஆண்டு முதல் நல்லாட்சி கொடுத்து வருகிறார்.
நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி துடைத்து எறியப்பட்டு விட்டது. மக்கள் காங்கிரஸ் கட்சியை ஏற்கத் தயாராக இல்லை. தொலைநோக்கி மூலம், எங்காவது நமது ஆட்சி நடக்கிறதா என்று தேடும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி நிலை வந்துவிட்டது. மத்தியப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்கு இடையே கடும் போட்டி இருக்கிறது. திக்விஜய் சிங், கமல்நாத், ஜோதிர்தயா சிந்தியா இதில் யாரை ஏற்கப்போகிறார் ராகுல்” என்று பேசினார்.
அதன்பின் வாகனத்தில் இருந்து கீழே இறங்க அமித் ஷா முயன்று இறங்கினார். அப்போது, திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைப் பார்த்த அருகில் நின்றிருந்த தொண்டர்கள், பாஜக நிர்வாகிகள் அவரைத் தாங்கிப்படித்து தூக்கினார்கள். இதனால், அமித் ஷா காயமின்றி தப்பினார். அதன்பின், பாஜக நிர்வாகிகளுடன் கலந்தாய்வு செய்தபின், மீண்டும் தனது பிரச்சாரத்தை அமித் ஷா தொடர்ந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT