Last Updated : 01 Nov, 2018 04:51 PM

 

Published : 01 Nov 2018 04:51 PM
Last Updated : 01 Nov 2018 04:51 PM

இளம் வயதில் படிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் அரசு அதிகாரி ஆகியிருப்பேன்: 100-க்கு 98 மதிப்பெண் பெற்ற 96 வயது பாட்டி உருக்கம்

இளம் வயதில் படிக்க வாய்ப்பு கிடைத்திருந்தால் அரசு அதிகாரி ஆகியிருப்பேன் என்று அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவுத் தேர்வில் 98 மதிப்பெண் பெற்ற 96 வயது கார்த்தியாயினி பாட்டி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

ஆலப்புழாவைச் சேர்ந்த 96 வயது கார்த்தியாயினி பாட்டி கேரள மாநில எழுத்தறிவு இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தறிவுத் தேர்வில் 98% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

இந்தத் தேர்வில் வாசிக்கும் திறனை சோதித்துப் பார்ப்பது, எழுதுவது மற்றும் கணக்குப் பாடம் ஆகியவை இருக்கும். எழுதும் திறனில் 40-க்கு 38 மதிப்பெண்களும், வாசிக்கும் திறனிலும் கணிதவியலில் முழு மதிப்பெண்களும் பெற்றார் கார்த்தியாயினி பாட்டி. தேர்வு முடிவுகள் புதன்கிழமை அன்று வெளியிடப்பட்டன.

தன்னுடைய இளமைக் காலத்தில் பள்ளிக்கூடத்துக்கே சென்றிராத கார்த்தியாயினி பாட்டி, வீட்டு வேலை செய்து தன் பிழைப்பை நடத்தியவர். இவருக்கு திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விழாவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் சான்றிதழ் அளித்து, பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தியாயினி பாட்டி, ''குழந்தைகள் படிப்பதைப் பார்த்து எனக்கும் படிக்கவேண்டும் என்ற ஆசை வந்தது. இளம் வயதில் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்போது கிடைத்திருந்தால் அரசு அதிகாரி ஆகியிருப்பேன். இப்போது கணிப்பொறியைக் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

தேர்வின்போது நான் யாரையும் பார்த்து காப்பி அடிக்கவில்லை. மற்றவர்களுக்கு என்ன எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தேன்'' என்றார்.

தள்ளாத வயதிலும் தளராது படித்து, 100-க்கு 98 மதிப்பெண்கள் எடுத்த பாட்டிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்துவருகிறது..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x