Published : 11 Nov 2018 09:02 AM
Last Updated : 11 Nov 2018 09:02 AM
சத்தீஸ்கர் சட்டப்பேரவைக்கு வரும் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதுபோல மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் 28-ம் தேதியும் ராஜஸ்தான், தெலங்கானாவில் டிசம்பர் 7-ம் தேதியும் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், “வரும் 12-ம் தேதி காலை 7 மணி முதல் டிசம்பர் 7-ம் தேதி மாலை 5.30 மணி வரையில், வாக்குப் பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தவோ, வெளியிடவோ அல்லது அதன் முடிவுகளை அச்சு அல்லது மின்னணு உள்ளிட்ட எவ்வித ஊடகங்களிலும் வெளியிடவோ தடை விதிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்படுகிறது. அதாவது முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கும் நாள் முதல் இறுதிகட்ட வாக்குப் பதிவு முடிவதற்கு அரை மணி நேரம் முன்பு வரை இது அமலில் இருக்கும்.
மக்களவை, சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளில் இருந்து இறுதிக்கட்ட தேர்தல் வரையில் கருத்து கணிப்புகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT