Last Updated : 26 Nov, 2018 11:58 AM

 

Published : 26 Nov 2018 11:58 AM
Last Updated : 26 Nov 2018 11:58 AM

மும்பை தாக்குதல் இன்று 10-ம் ஆண்டு: துப்புக்கொடுத்த படகு எஞ்சின்; உதவிய எப்பிஐ: வெளிவராத தகவல்கள்

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் 10 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், தாக்குதலில் எந்த நாட்டுத் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் உள்ளிட்ட விவரங்களைக் கண்டுபிடிக்க இந்தியாவுக்கு அமெரிக்க எப்பிஐ அதிகாரிகள் உதவினார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி கடல்வழியாக வந்த பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் மும்பை ரயில் நிலையம், தாஜ் நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்டவற்றில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர். உயிருடன்பிடிபட்ட தீவிரவாதி கசாப் நீதிமன்ற விசாரணைக்குப் பின் தூக்கிலிடப்பட்டார்.

இதில் தீவிரவாதிகள் கடல்வழியாக வருவதற்குப் படகைப் பயன்படுத்தினார்கள். அந்தப் படகில் பயன்படுத்திய யமாஹா மோட்டார் மூலமே இந்தச் செயலில் யார் ஈடுபட்டது,யாருக்கெல்லாம் தொடர்பு என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது.

இந்தத் தாக்குதல் யார் நடத்தினார்கள் என்பது குறித்த விசாரணையில் முக்கிய உதவியாக அமெரிக்காவின் எப்பிஐ அதிகாரிகள் இருந்தார்கள் என்ற சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை குண்டுவெடிப்பு விசாரணையில் முக்கியப் பங்காற்றிய போலீஸ் அதிகாரி தற்போது ஓய்வு பெற்ற நிலையில், அவர் தி இந்துவிடம்(ஆங்கிலம்) அதன்விவரங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:

தீவிரவாதிகள் 10 பேர் பாகிஸ்தானில் இருந்து ஒரு படகுமூலம் இந்தியக் கடற்பகுதிக்குள் வந்தவுடன் அங்கு மீன்பிடித்தலில் ஈடுபட்டிருந்த எம்.வி.குபெர் என்ற கப்பலைக் கடத்தினார்கள். தாங்கள் வந்த படகை அந்த கப்பலி மூலம் இழுத்தைக்கொண்டு, 23-ம்தேதி அங்கிருந்து புறப்பட்டனர். தீவிரவாதிகளுக்கு மும்பை கடற்பகுதி தெரியாததால், கப்பலின் கேப்டன் அமர்சந்த் சோலங்கியை துப்பாக்கிமுனையில் கடத்தி கப்பலை மும்பைக்குச் செலுத்தினார்கள். ஏறக்குறைய 30 மணிநேரம் மும்பைக்குத் தீவிரவாதிகள் பயணித்தனர். மும்பைக்கு அருகே வந்ததும் கப்பலின் கேப்டன் சோலங்கியை சுட்டுக்கொலை செய்தனர்.

அதன்பின் பாகிஸ்தானில் இருந்து தாங்கள் இந்தியக் கடற்பகுதிக்குள் வர பயன்படுத்தியசிறிய படகுமூலம் மும்பை கடற்பகுதிக்குள் ஜிபிஎஸ் உதவியுடன் தீவிரவாதிகள் இரவு 8.15 மணிக்கு நுழைந்தனர். அதன்பின் தங்களைத் தயார் செய்து கொண்டு தாக்குதல் நடத்தினார்கள். தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டபின், போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில்தான், பத்வார் கடற்பகுதியில் ஆதரவின்றி நின்றிருந்த சிறிய படகை கண்டுபிடித்தனர்.

அதன்பின் அமெரிக்க எப்பிஐ உதவியுடன் படகில் பொருத்தப்பட்டிருந்த யமாஹா எஞ்சினை யார் வாங்கியது என் அறிய முனைந்தனர். ஆனால், யமஹா எஞ்சினின் எண் அழிக்கப்பட்டு விட்டதால், கண்டுபடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. அதன்பின் அமெரிக்க எப்பிஐ அதிகாரிகள், ஜப்பானில் உள்ள யமஹா நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு எஞ்சின் எண்ணைக் கண்டுபிடிக்க கோரினார்கள்.

எஞ்சின் எண் அழிக்கப்பட்டதால், அதில் உள்ள சிலிண்டர்களில இருக்கும் எண்கள் மூலம் அந்த யமாஹா எஞ்சின் கராச்சியில் உள்ள ஒரு கடைக்கு விற்பனை செய்யப்பட்டது எனத் தெரிவித்தனர்.

அதன்பின் அமெரிக்க எப்பிஐ அதிகாரிகள் கராச்சியில் உள்ள அந்த குறிப்பிட்ட முகவரிடம் கேட்டபோது, அதேபோன்று 8 யமஹா எஞ்சின்களையும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் நிதியாளர் ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன் விற்பனை செய்ததாகத் தெரிவித்தார். லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தீவிரவாதிகள் 10 பேர், 10 ஆண்டுகளுக்கு முந்தைய எஞ்சின் மூலம் மும்பைக்கு வந்து தாக்குதல் நடத்தியது முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

யமஹா நிறுவனத்திடம் இருந்து பெற்ற படகுஎஞ்சின எண்கள் போன்ற ஆதாரங்களை பாகிஸ்தானிடம் இந்திய அரசு அளித்து குற்றவாளிகளைப் பிடிக்க வலியுறுத்தியது. அமெரிக்காவும் கடும் நெருக்கடி கொடுத்ததையடுத்து பாகிஸ்தான் ரெய்டு நடத்தி, லஷ்கர் இ தொய்பா அமைப்பின் முக்கியத் தலைவர் ஜகி உர் ரஹ்மான்லக்வி உள்ளிட்ட 7 பேரைக் கைது செய்தது.

பாகிஸ்தானின் விசாரணை அமைப்பான எப்ஐஏ மும்பை தாக்குதல் வழக்கில் 27 பேரை குற்றவாளி என அறிவித்து கைது செய்தது. ஆனால், இன்னும் வழக்கு நடக்கிறதே தவிர விசாரணை முடியவில்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மற்றொரு ஆதாரத்தையும் கண்டுபிடிக்க எப்பிஐ அதிகாரிகள் உதவியுள்ளனர். மும்பை தாக்குதல் நடந்தபோது, கொலாபா போலீஸ் நிலையத்தில் சக்திவாய்ந்த ஐஇடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் குண்டுகள் குறித்து எப்பிஐ அதிகாரிகளும், இங்கிலாந்து புலனாய்வு அதிகாரிகளும் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த வெடிபொருட்களில் இருக்கும் கைரேகைகளை ஒப்பிட்டுப்பார்த்து, அது லஷ்கர் இ தொய்பா அமைப்பின் சதிவேலை என்பதை முடிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x