Published : 09 Nov 2018 05:34 PM
Last Updated : 09 Nov 2018 05:34 PM
திருமணமான 6 மாதங்களில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ள லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், தற்போது ஹரித்துவாரில் ஆசிரமத்தில் தங்கியுள்ளார். தனது முடிவுக்கு குடும்பத்தார் ஒப்புக் கொள்ளும் வரை வீடு திரும்பபோவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பிஹார் மாநில முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், மாநிலத்தின் முன்னாள் முதல்வரான தராகோ ராயின் பேத்தி ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொண்டார்.
பாட்னாவில் உள்ள நோட்ரி டேம் அகாடெமியில் பள்ளிப்படிப்பை முடித்த ஐஸ்வர்யா ராய் டெல்லியில் எம்.பி.ஏ பயின்றவர். இவர்கள் திருமணம் கடந்த மே 12-ம் தேதி பாட்னாவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்தில் பல்வேறு கட்சிதலைவர்கள், பிரபலங்கள் பங்கேற்றனர்.
திருமணம் முடிந்து 6 மாதங்கள் கூட ஆகாத நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும், பிரிந்து வாழ விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் ‘‘விவாகரத்து கோரி நான் மனுத்தாக்கல் செய்துள்ளது உண்மைதான். துயரத்துடன் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை’’ என தேஜ் பிரதாப் பேட்டியளித்தார்.
ஆனால் அவரின் முடிவுக்கு தாய் ராப்ரி தேவி உட்பட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறிய அவர் எங்கு இருக்கிறார் என்ற விவரத்தையும் வெளியிடவில்லை. தீபாவளிக்கும் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர்.
இந்தநிலையில் தேஜ் பிரதாபின் தம்பியும், லாலு பிரசாத்தின் இளைய மகனுமான தேஜஸ்வியின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெறகிறது. இதையொட்டி தனது சகோதரர் தேஜஸ்விக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய தேஜ் பிரதாப், தனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை வீடு திரும்பப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
ஹரித்துவாரில் ஒரு ஆசிரமத்தில் தான் தங்கி இருப்பதாகவும் தனக்கு விவாகரத்து பெற்றுத்தர குடும்பத்தினர் ஒப்புக் கொள்ளும் வரை வீடு திரும்ப வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளார். பிஹார் உள்ளூர் தொலைக்காட்சியிலும் தேஜ் பிரதாப் யாதவின் தொலைபேசி உரையாடல் இன்று ஒளிபரப்பாகியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT