Published : 02 Nov 2018 09:09 AM
Last Updated : 02 Nov 2018 09:09 AM
தமிழகத்தில் கிராமப் பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட தலைவர்களுக்கு விழா எடுப்பதை பாஜக தொடங்கியுள்ளது.
கடந்த அக்டோபர் 30 -ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், முதன்முறையாக பாஜகவினர் அதிக அளவில் பங்கேற்றனர்.
குறிப்பாக, தமிழகத்தில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு பாஜகவினர் சென்று அங்கு முத்துராமலிங்கத் தேவர் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இது தமிழக கிராமங்களில் தம் கட்சிக்கு ஆதரவான வாக்குகளை சேகரிக்கும் பாஜகவின் உத்தியாக கருதப்படுகிறது.
இதற்கான யோசனையை பாஜகவின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தலைவரான எஸ்.கே.கார்வேந்தன், கட்சித் தலைமையிடம் கூறி அனுமதி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இனி தமிழகத்தில் மேலும் பல பிற்படுத்தப்பட்ட தலைவர்களின் முக்கிய விழாக்களை கிராமங்களில் நடத்தவும் பாஜகவினர் திட்டமிட்டு வருகின்றனர். இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பாஜகவின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறியதாவது:
தமிழகத்தில் பாஜக மீது பல்வேறு காரணங்களால் கடும் எதிர்ப்பு நிலவுவதை முறியடிக்க வேண்டும் என எங்கள் தலைவர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். அதன் அடிப்படையிலேயே, கிராமங்களில் பிற்படுத்தப்பட்ட தலைவர்களுக்கு விழா எடுத்து வருகிறோம். அந்த வகையில், இனி காமராஜர், தீரன் சின்னமலை, வ.உ. சிதம்பரனார், திருப்பூர் குமரன் போன்றவர்களுக்கு விழா எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT