Published : 02 Nov 2018 09:23 AM
Last Updated : 02 Nov 2018 09:23 AM

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை வரும் 26-ம் தேதி வரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3500 கோடி முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் (எஐபிபி) அனுமதி கோரியது. இதில் ப.சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாகவும் இதன் மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது.

இது தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி உள்ளிடோருக்கு எதிராக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்துள்ளன.  இந்த வழக்குகளில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தியை கைது செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தடை அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இருவரையும் கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி நேற்று வரும்  26-ம் தேதி  வரை நீட்டித்தனார்.

முன்னதாக  சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தில், “விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்க மறுக்கிறார். இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி குறிப்பிட்ட காலவரம்புக்குள் விசாரணையை முடிப்பது சிரமம். எனவே அவரை கைது செய்து விசாரிப்பது அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின் ஆட்சேபத்துக்கு பதில் மனு தாக்கல்  செய்ய விரும்புவதாக கூறினர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்தார்.

உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு

இதனிடையே கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் நேற்று வலியுறுத்தப்பட்டது.

இதற்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, “கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வது உடனே விசாரிக்க வேண்டிய அளவு முக்கிய விஷயமல்ல. எங்களுக்கு நிறைய வழக்குகள் உள்ளன” என்று கூறி கார்த்தியின் கோரிக்கையை நிராகரித்தனர்.

கார்த்தி பிரிட்டன் செல்ல இதற்கு முன் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அமலாக்கத் துறையின் எதிர்ப்பை மீறி இந்த அனுமதி வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x