Published : 02 Oct 2018 03:10 PM
Last Updated : 02 Oct 2018 03:10 PM

பொதுச்சொத்துகளை தொண்டர்கள் சேதப்படுத்தினால், அரசியல் கட்சித் தலைவர்களே இழப்பீடுக்கு பொறுப்பு : உச்ச நீதிமன்றம் உத்தரவு

பேரணி, பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டம், பஸ் மீது கல்வீச்சு போன்றவற்றில் அரசியல் கட்சிகள் ஈடுபடும்போது கட்சித் தொண்டர்கள் சேதப்படுத்தும் பொதுச்சொத்துகளுக்கு இழப்பீடு தொகையை தொண்டர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களே செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுச்சொத்து மட்டுமல்லாது தனியார் சொத்துகளைச் சேதப்படுத்தினாலும், ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் தலைவர்கள் இழப்பீடு தர வேண்டும், கிரிமினல் வழக்கையும் சந்திக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் ஒரு வழக்கில் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

''அரசியல் கட்சித் தலைவர்கள், சில அமைப்புகளின் தலைவர்கள் போராட்டம் என்ற பெயரில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் , திரைப்படங்களுக்கும், கருத்துரிமைக்கு எதிராகவும் போராட்டம் நடத்தத் தூண்டிவிடுகிறார்கள். அவ்வாறு நடக்கும் போது, பொதுச்சொத்துகளையும், தனியார் சொத்துகளையும் சேதப்படுத்தக் கும்பல்கள் ஊக்குவிக்கப்படுவார்கள், தூண்டப்படுவார்கள். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடந்தால், அதற்குச் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்புகளின் தலைவர்களும்தான் பொறுப்பு. அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை பாயும்.

பொதுச்சொத்துகளுக்கு கும்பல்களால் உண்டாக்கப்படும் சேதத்துக்கு வரிசெலுத்துவோர் எந்தவிதமான பணத்தையும் செலவு செய்யவோ, அவர்களிடம் இருந்து வசூலிக்கவோ கூடாது. அதற்கு அவர்களுக்குப் பொறுப்பில்லை.

இந்த வன்முறையில், போராட்டத்தில் ஈடுபடும் ஒவ்வொரு நபர் மீதும் ஐபிசி பிரிவு 153ஏ (பகைமையைத் தூண்டுதல்), 295ஏ (மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்தும் வகையில் செயல்கள் செய்தல்), 298 (உள்நோக்கத்துடன் மத உணர்வுகளைக் காயப்படுத்துதல்), 495 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யலாம்.

மேலும், அரசியல் கட்சியின் செய்தித்தொடர்பாளர்கள் பேசவதால், அல்லது சமூக ஊடகங்கள் மூலம் தகவல் பரவுவதால் அல்லது தனிமனிதரால் கூடத் தகவல் பரவி வன்முறை ஏற்படலாம். அவ்வாறு நிகழும்போது அதற்குக் காரணமானவர்களை போலீஸார் சம்பவ இடத்திலேயே கைது செய்ய வேண்டும்.

பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பான வழக்கில் எந்த அரசியல் கட்சித் தலைவரும் போலீஸாரிடம் விசாரணைக்கு ஆஜராகத் தவறினால், அவருக்கு எதிராகச் சந்தேகமும், அவரைத் தலைமறைவான குற்றவாளி என்றும்கூட போலீஸார் அறிவிக்கலாம்.

கும்பல்களாக வன்முறைகள் நிகழ்த்தும்போது, அதைத் தடுக்க மாவட்டந்தோறும் சிறப்பு அதிரடிப்படையை தயாராக மாநில அரசுகள் வைத்திருக்க வேண்டும். இணையதளம் தயாராக வைத்திருந்து, பொதுச்சொத்துகள், தனியார் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களை அதில் பதிவிட வேண்டும், சிறப்பு உதவி மையங்கள், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளான கண்ணீர் புகைக் குண்டுகள், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்கள் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x