Published : 20 Oct 2018 12:32 PM
Last Updated : 20 Oct 2018 12:32 PM

ராம்லீலாவில் கோர ரயில் விபத்து: ராவணனும் உயிரிழந்த பரிதாபம்

பஞ்சாபில் தசரா விழாவின் போது நடந்த கோரமான ரயில் விபத்தில் ராவணன் வேடமேற்று நடித்து வந்த தல்பீர் சிங் என்பவரும் உயிரிழந்துள்ளார். திருமணமான அவருக்கு மனைவியும், 8 மாதக் கைக்குழந்தையும் உள்ளனர்.

தசரா விழா நேற்றுடன் கோலாகலமாக நிறைவடைந்தது. இதை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சிகள் பிரம்மாண்டமாக நடந்தன. இதன் ஒருபகுதியாக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு அருகில் உள்ள ஜோதா பதக் என்ற இடத்தில் ராவண வதம் நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாப் சுற்றுலா துறை அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவியும் காங்கிரஸ் பிரமுகருமான நவ்ஜோத் கவுர் சித்து சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்தார். இங்குள்ள மைதானத்தில் ராவணனின் உருவ பொம்மை மிகப் பெரிய அளவில் வைக் கப்பட்டிருந்தது. ராவண வதத்தைக் காண நூற்றுக் கணக்கான மக்கள் மைதானத்தில் திரண்டிருந்தனர்.

நிகழ்ச்சியின் இறுதிக்கட்டமாக ராவணனின் உருவ பொம் மையை தீயிட்டு எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மைதானத்துக்கு அருகில் உள்ள தண்ட வாளத்தில் நின்று நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்துக் கொண்டி ருந்தனர். ராவணன் உருவ பொம்மை எரிக்கப்பட்டதும் உற்சாகத்தில் ஏராளமானோர் ஆரவாரம் செய்தனர்.

அந்த நேரத்தில் ஜலந்தரில் இருந்து அமிர்தசரஸ் செல்லும் ரயில் வேகமாக வந்து அவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில், 61 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோர் காயமடைந்தனர். பலரது கைகால்கள் உடைந்தும், தலையில் பலத்த அடிபட்டும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் ராம்லீலா நாடகத்தில் ராவணனாக நடித்த தல்பீர் சிங் என்ற வாலிபரும் ரயில் விபத்தில் இறந்துள்ளார். அவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 8 மாத கைக்குழந்தை உள்ளது. தல்பீல் சிங் இறந்ததையடுத்து அவரது மனைவி மற்றும் தாய் இருவரும் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

மகன் தல்பீர் சிங் இறந்துவிட்டதால், தங்கள் குடும்பம் நிராதரவாய் நிற்பதாகவும், தல்பீர் சிங்கின் மனைவிக்கு அரசு பணி வழங்கவேண்டும் எனவும் அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x