Published : 30 Oct 2018 08:55 AM
Last Updated : 30 Oct 2018 08:55 AM
கன்னட திரைப்பட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அண்மையில் '#மீ டூ' (நானும் தான்) மூலம் நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் தெரிவித்தார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த அர்ஜுன், ஸ்ருதியிடம் ரூ. 5 கோடி கேட்டு பெங்களூரு குடிமையியல் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்தார். அர்ஜுனின் மேலாளர் பிரஷாந்த் சம்பர்கி, ஸ்ருதி சமூக வலைதளங்களில் அர்ஜுன் பெயரில் போலி கணக்குகள் தொடங்கி, அவப்பெயர் ஏற்படுத்தி வருவதாக போலீஸில் புகார் அளித்தார். இதனிடையே கன்னட திரைப்பட வர்த்தக சபை அர்ஜுன் மற்றும் ஸ்ருதியிடம் நடத்திய சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதையடுத்து ஸ்ருதி கடந்த சனிக்கிழமை பெங்களூரு கப்பன் பூங்கா காவல் நிலையத்தில், 'நிபுணன்' திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். இதன்பேரில் போலீஸார் அர்ஜுன் மீது இந்திய தண்டனை சட்டம் 354 ஏ, 509, 506, 354 ஆகிய 4 நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் கப்பன் பூங்கா போலீஸார் அர்ஜுன் மீதான பாலியல் வழக்கில் ஸ்ருதி தாக்கல் செய்த ஆதாரங்களை பெங்களூரு மாநகர காவல் ஆணையர் சுனில் குமாருக்கு அனுப்பி வைத்தனர். அதை ஆராய்ந்த அவர், 2 தினங்களில் ஸ்ருதி புகார் குறித்து விளக்கம் அளிக்குமாறும் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறும் அர்ஜுனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸார் அர்ஜுனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், ஸ்ருதியிடம் நேற்று முதல்கட்ட விசாரணையை தொடங்கினர். இதனிடையே ஸ்ருதிக்கு எதிராக அர்ஜுன் தொடுத்த மான நஷ்ட வழக்கு ஓரிரு தினங்களில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT