Published : 23 Oct 2018 11:40 AM
Last Updated : 23 Oct 2018 11:40 AM

பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் சிகிச்சை பலனின்றி மரணம்; உடலுறுப்புகளை தானம் செய்ய தந்தை முடிவு

டெல்லி குருகிராமில் அக்டோபர் 14-ம் தேதி நீதிபதியின் மனைவி, மகனைப் பட்டப்பகலில் பாதுகாவலரே துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில், மகன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரின் உடலுறுப்புகளைத் தானம் செய்ய தந்தை முன்வந்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த நீதிபதியின் மனைவி, சம்பவம் நடந்த மறுநாளே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லி குர்கவானில் கூடுதல் செசன்ஸ் மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் கிருஷ்ண காந்த் சர்மா. இவரின் மனைவி ரிது (வயது 38), மகன் துருவ் (வயது 18). இவர்களின் குடும்பத்துக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாவலராகப் பணியாற்றியவர் காவலர் மஹிபால் சிங்.

இந்நிலையில், கடந்த 14-ம் தேதி குர்கவானில் உள்ள பரபரப்பான செக்டர் 49 சாலையில் உள்ள ஆர்காடியா சந்தையில் நீதிபதியின் மனைவி, மகன் ஆகியோர் பொருட்கள் வாங்கிச் சென்றனர். அப்போது, பாதுகாவலருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பாதுகாவலர் மஹிபால் சிங், தான் வைத்திருந்த பிஸ்டலால் நீதிபதியின் மனைவி ரிது, மகன் துருவ் ஆகியோரைப்பட்டப்பகலில் அனைவரின் கண்முன் சுட்டார்.

மேலும் நீதிபதியின் மகன் துருவை தரதரவென சாலையில் இழுத்துவந்து காரில் ஏற்றப் பாதுகாவலர் மஹிபால் முயன்றார். ஆனால், முடியவில்லை. இதையடுத்து காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.

இந்தக் காட்சியைப் பார்த்த சாலையில் இருந்தவர்கள் அச்சத்தில் மிரண்டு நின்றனர். அதன்பின் போலீஸாருக்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்து, குண்டுக் காயம் அடைந்த இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.

இருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் சிகிச்சைப் பலனின்றி அடுத்த நாளே மனைவி ரிது மரணமடைந்தார். காவலர் மனிபால் அடுத்த இரண்டு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு மகன் துருவ் உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடலுறுப்புகளை தானம் செய்யப்போவதாக நீதிபதி கிருஷ்ணகாந்த் தெரிவித்துள்ளார்.

பாதுகாவலரால் சுடப்பட்டு இறந்த மகனின் உடலுறுப்புகளை தானம் செய்ய தந்தை முடிவெடுத்துள்ளது அனைவரின் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x