Published : 15 Oct 2018 12:50 PM
Last Updated : 15 Oct 2018 12:50 PM

சபரிமலை: தீவிரமடையும் போராட்டம்; பிரச்சினைக்கு தீர்வு காண கேரள அரசு இறுதிகட்ட முயற்சி

சபரிமலையில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை மறுதினம்  நடை திறக்கப்படும் நிலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் தீவிரமடைந்துள்ளது.  இதையடுத்து, இறுதிகட்ட முயற்சியாக அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசு முன் வந்துள்ளது. 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுமுதல் 50 வயதுடைய பெண்கள் செல்ல நூற்றாண்டுகளாகத் தடை இருக்கிறது. இந்தத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், சபரிமலைஐயப்பயன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் சென்று சாமிதரிசனம் செய்யலாம் எனத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்புக்கு கேரளாவில் உள்ள பந்தம் அரச குடும்பத்தினர், தந்திரி குடும்பத்தினர், மற்றும் பெண்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு ஏராளமானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். கேரளா மட்டுமல்லாது, தமிழகத்திலும் சபரிமலையில் பெண்கள் வழிபாடு செய்யஅனுமதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகப் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பாஜக, இந்து அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இதனால் கேரள அரசுக்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 17-ம் தேதி மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட உள்ளது.

இதையடுத்து, கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து கேரள அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுபடி பெண்கள் சபரிமலை வந்தால் அவர்களுக்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்து தருவது குறித்தும் ஆலோசனைகள் நடந்து வருகின்றன. சமூக ஆர்வலரும் ‘பூமாதா பிரிகேட்’ அமைப்பின் தலைவருமான திருப்தி தேசாய் சில பெண்களுடன் சபரிமலை கோயிலுக்கு செல்ல இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்தநிலையில் கோயில் நடை திறக்கும் முன்பாக சபரிமலை விவகாரத்தில் இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்த கேரள அரசு முன் வந்துள்ளது. இதுகுறித்து திருவாங்கூர் தேசவம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில் ‘‘சபரிமலை பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைகளை மாற்ற நாங்கள் நினைக்கவில்லை. அதனை பாதுகாக்கவே விரும்புகிறோம். அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும்.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். பந்தளம் அரச குடும்பம், தந்திரிகள்,  பக்தர்கள், இந்து அமைப்புகள் என அனைத்து தரப்பினருடன் பேச தயாராக உள்ளோம். சபரிமலை விவகாரத்தை அரசியல் பிரச்னையாக்க தேவசம் போர்டு விரும்பவில்லை. சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும்’’ எனக் கூறினார்.

அதேசமயம் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில் ‘‘எங்களை பொறுத்தவரை நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தவே விரும்புகிறோம். பெண்கள் சபரிமலைக்கு வந்தால் அவர்களை தடுக்க மாட்டோம். தேவையான பாதுகாப்பு வழங்குவோம்’’ எனக்கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x