Last Updated : 05 Oct, 2018 12:44 PM

 

Published : 05 Oct 2018 12:44 PM
Last Updated : 05 Oct 2018 12:44 PM

மனைவி கொலை வழக்கு: டிவி தொடர் தயாரிப்பாளரும் ஆயுள் தண்டனைக் கைதியுமான சுஹைப் இலியாஸி விடுதலை

மனைவியைக் கொலை செய்ததாகக் கூறி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளரான சுஹைப் இலியாஸி டெல்லி உயர் நீதிமன்றத்தால் வெள்ளிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நீதிபதிகள் எஸ்.முரளிதர் மற்றும் வினோத் கோயல் அடங்கிய அமர்வு, இலியாஸியின் மேல் முறையீட்டை அனுமதித்து, தண்டனையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

சுஹைப் இலியாஸி தொலைக்காட்சி கிரைம் ஷோ-வான India’s Most Wanted தொடர் மூலம் பிரபலமானார். இவர் 2000-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி மனைவி அஞ்சு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார்.

மனைவியை வரதட்சணைக் கொடுமை செய்ததாக அஞ்சுவின் தாயார் மற்றும் சகோதரி ஆகியோர் குற்றம்சாட்டியிருந்தனர். இலியாஸி மீது தொடுக்கப்பட்ட வழக்கில் 2017-ல் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அத்துடன் இலியாஸிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கொலையுண்ட மனைவி அஞ்சுவின் பெற்றோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் கோர்ட் உத்தரவிட்டது. இந்நிலையில் தற்போது மேல்முறையீட்டு வழக்கில், டெல்லி உயர் நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது.

தீர்ப்பின்போது அங்கிருந்த இலியாஸியின் மகள் ஆலியா, மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். தீர்ப்பு வெளியான பிறகு பேசிய அவர், ''நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என்னுடைய உணர்வுகளை இப்போது வெளிப்படுத்த முடியவில்லை.

தீர்ப்பு வருவதற்காக இத்தனை நாட்களாகக் காத்திருந்தோம். இதனால் நாங்கள் நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறோம். நான் என்னுடைய தந்தையை முழுமையாக நம்புகிறேன்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x