Published : 06 Oct 2018 05:36 PM
Last Updated : 06 Oct 2018 05:36 PM
கேரளாவில் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல்லின் காவலை மேலும் 14 நாட்களுக்கு நீட்டித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் பிராங்கோ மூலக்கல் அக்.20 வரை நீதிமன்றக் காவலில் இருப்பார்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் ஜலந்தர் மறை மாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல். இவர் மீது கேரளாவின் கோட்டயம் மாவட்டம், குருவிளங்காடு கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரப் புகார் அளித்தார். இதுதொடர்பாக பிராங்கோ 3 நாள் விசாரணைக்குப் பிறகு கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். பிராங்கோ தற்போது கோட்டயம் மாவட்டம் பலா கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளார்.
அதைத் தொடர்ந்து அவர் தனக்கு ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். காவல்துறை தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதை அடுத்து புதன்கிழமை அன்று அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.
பிராங்கோவின் நீதிமன்றக் காவல் சனிக்கிழமையுடன் முடிந்ததை அடுத்து, பலா சிறையில் உள்ள நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது பிராங்கோ மூலக்கல்லின் காவலை 14 நாட்களுக்கு நீட்டித்து கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தற்போது மூலக்கல்லின் வழக்கறிஞர்கள் அவருக்கு ஜாமீன் கோரி, மீண்டும் கேரள உயர் நீதிமன்றத்தை நாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT