Published : 20 Aug 2014 07:32 PM
Last Updated : 20 Aug 2014 07:32 PM

கருப்புப் பண விசாரணையில் முன்னேற்றம்: உச்ச நீதிமன்றம் திருப்தி

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையில் ‘முன்னேற்றம்’ ஏற்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கருப்புப் பணத்தை மீட்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் எம்.பி.ஷா, அரிஜித் பசாயத் தலைமையில் 13 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இக்குழு தனது முதல் அறிக்கையை ‘சீல்’ வைக்கப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எச்.எல்.தத்து, ரஞ்சனா தேசாய், மதன் லோக்கூர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (புதன்கிழமை) தாக்கல் செய்தது.

கருப்பு பண விவகாரத்தில் மனுதாரரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சார்பில் அவரது வழக்கறிஞர் அனில் திவான் அறிக்கையின் நகலை வழங்கும்படி கோரினார்.

இதுகுறித்து குழுவிடம் கோரிக்கை வைக்கும்படி நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், கருப்பு பணம் குறித்த விவரங்களை குழுவிடம் பகிர்ந்து கொள்ளும்படி மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிறப்பு விசாரணைக் குழு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ததையடுத்து நீதிபதி எச்.எல். தத்து கூறும்போது, “சில வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

அந்த அறிக்கையின் உள்ளடக்கங்களைப் பார்க்க மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத் மலானி சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

மேலும், அந்த முதல் அறிக்கையை தாங்கள் பார்த்ததாகவும், அது ரகசியக் காப்புக்குரியது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

“சிறப்பு விசாரணைக்குழுவினரிடம் ராம்ஜெத் மலானி பேசி, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முறைகள் பற்றி தனது அறிவுரைகளை வழங்கலாம்” என்றார்.

அத்துடன், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பண நபர்கள் பட்டியலில் முன்னாள் இந்தியப் பிரதமர் பெயரும் இருப்பதாக ஜெத்மலானியிடம் ஜெர்மனி அதிகாரிகள் தெரிவித்த விவகாரம் குறித்து மத்திய அரசு பதில் அளிக்கவும், ஜெர்மனி அதிகாரிகளுக்கு இது பற்றி ஜெத் மலானி எழுதிய 3 கடிதங்களையும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் என்.கே.கவுலிடம் அளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கறிஞர் கவுல் குறிப்பிட்ட அதிகாரிகளிடம் இதுபற்றி பேசிய பிறகு நவம்பர் 11ஆம் தேதி அடுத்த விசாரணையின் போது அவர் அதன் விவரங்களைத் தெரிவிப்பார் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

அடுத்த 2 மாதங்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த வழிகாட்டுதல்களின்படி விசாரணையை மேலும் தொடர வேண்டும் என்றும் நீதிபதிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x