Published : 15 Aug 2018 08:19 AM
Last Updated : 15 Aug 2018 08:19 AM
எனது சுயமரியாதைக்கு இடை யூறாக இருப்பதால் நான் வங்கியில் வாங்கிய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டாம் என கர்நாடக விவசாயி ஒருவர் முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள மூடிகெரே கிராமத்தைச் சேர்ந்த அமர்நாத் (45), முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “விவசாயிகள் பயிர்க்கடனாக பெற்ற ரூ.48 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்வதாக அறிவித்திருக்கிறீர்கள். நான் விவசாயத்தைப் பெருமையாக கருதுகிறேன். விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் எனது ரூ. 4 லட்சம் பயிர்க்கடனை நானே செலுத்த முடியும்.
மேலும் அரசு எனது கடனைச் செலுத்துவது சுயமரியாதைக்கு இடையூறாக உள்ளது. நான் வாங்கிய கடனை நானே செலுத்துகிறேன். இதனால் எனது விவசாய கடனை நீங்கள் தள்ளுபடி செய்ய வேண்டாம். வேண்டுமானால் விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு நியாயமான விலை, மானிய விலையில் உரம் உள்ளிட்டவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக விவசாயிகள் கடன் தள்ளுபடி கோரிவரும் நிலையில் ஒரு விவசாயி இவ்வாறு கடிதம் எழுதியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT