

சுல்தான்பூர்: உத்தர பிரதேசத்தில் அதிக சத்தம் காரணமாக 140 கோழிகள் உயிரிழந்தன. இதுதொடர்பாக ஒலி பெருக்கி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேசம் சுல்தான்பூரில் கடந்த 25-ம் தேதி திருமண ஊர்வலம் நடைபெற்றது. அப்போது ஒலிபெருக்கியில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது. அப்போது அருகில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் சில கோழிகள் அதிர்ச்சியில் இறந்துள்ளன. இதையடுத்து கோழிப் பண்ணை உரிமையாளர் முகமது சபிர், ஒலி பெருக்கி (டி.ஜே) உரிமையாளரிடம் சத்தத்தை குறைக்கும்படி கூறியுள்ளார். ஆனால், அவர் கண்டுகொள்ளவில்லை. கோழிப்பண்ணை ஊழியரிடம் 3 முறை வேண்டுகோள் விடுத்தும், பலன் இல்லை.
ஒலிபெருக்கியின் சத்தத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் கோழிப் பண்ணையில் இருந்த 140 கோழிகள் உயிரிழந்தன. இதனால் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு முகமது சபிர் புகார் தெரிவித்தார்.
போலீஸார் வந்ததும் இழந்த கோழிகளுக்கு இழப்பீடு தருவதாக டி.ஜே. உரிமையாளர் கூறினார். போலீஸார் சென்றதும் அவர் தப்பிச் சென்றுவிட்டார். இறந்த கோழிகளைப் பரிசோதனைக்கு அனுப்பியதில், அதிக சத்தத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இதய செயலிழப்பு ஏற்பட்டு கோழிகள் இறந்ததாக உடற்கூறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து டி.ஜே. உரிமையாளரை கைது செய்து அவரது டி.ஜே. வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.