Published : 20 Aug 2018 08:23 AM
Last Updated : 20 Aug 2018 08:23 AM

தீவிரவாதி தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி லண்டனில் கைது

தீவிரவாதி தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி லண்டனில் கைது செய்யப்பட்டார். தாவூதின் வலதுகரமாக செயல்பட்ட அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை தொடர் குண்டு வெடிப்பு உட்பட இந்தியாவில் பல்வேறு தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்ட தலைமறைவு தீவிரவாதி தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி உள்ளார். தாவூதின் நெருங்கிய கூட்டாளியான பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாபிர் மோதி என்பவர் லண்டனில் தங்கியிருந்தார். இவர் தாவூத் இப்ராகிமுக்கு வலது கரம் போன்றவர். தாவூதின் இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தாவூதின் சொத்துக்கள், முதலீடுகளை ஜாபிர் மோதி நிர்வகித்து வந்தார். மேலும், போதை மருந்து மற்றும் ஆயுதங்கள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் ஆகிய குற்றங்களிலும் ஜாபிர் மோதி ஈடுபட்டுள்ளார்.

ஜாபிர் மோதியை கைது செய்யும்படி இங்கிலாந்து போலீஸாரிடம் இந்திய அதிகாரிகள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி, ஜாபிர் மோதியை ஹில்டன் என்ற ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை லண்டன் போலீஸார் கைது செய்தனர்.

தாவூத் இப்ராகிமின் நடவடிக்கைகள், அவருடன் உள்ள தொடர்புகள் குறித்து ஜாபிர் மோதியிடம் லண்டன் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ‘‘இப்போதைய நிலையில் எந்த தகவலையும் சொல்ல முடியாது’’ என்று லண்டன் போலீஸார் தெரிவித்தனர். தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளியான ஜாபிர் மோதி கைது செய்யப்பட்டிருப்பது முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x