Published : 31 Aug 2018 01:07 PM
Last Updated : 31 Aug 2018 01:07 PM

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து விவகாரம்: விசாரணையை ஜனவரிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 35ஏ சட்டப்பிரிவை நீக்கக்கோரித் தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணையை ஜனவரி 2-வது வாரத்துக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் நடந்துமுடியும் வரை வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் விடுத்த வேண்டுகோளை அடுத்து உச்ச நீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளது.

நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதி சந்திரசூட், ''உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடியட்டும். உள்ளாட்சித் தேர்தலின்போது வழக்கை விசாரித்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதனால் தற்போது வழக்கை விசாரிக்க விரும்பவில்லை'' என்று தெரிவித்தார்.

35ஏ சட்டப்பிரிவு என்றால் என்ன?

அரசியலமைப்பின் 35-வது பிரிவு ஜம்மு -காஷ்மீர் தவிர மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், காஷ்மீரில் நிரந்தரக் குடியுரிமை பெறுதல், நிலம் வாங்குதல் உள்ளிட்ட சிறப்பு உரிமைகளைப் பெறத் தடை விதிக்கிறது. இது மாநிலங்களின் சமத்துவத்துக்குத் தடையாக உள்ளதாகக் கூறி பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.

செப்டம்பரில் தேர்தல்

ஜம்மு - காஷ்மீரில் 8 கட்டங்களாக நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல் செப்டம்பரில் தொடங்கி டிசம்பரில் முடிவடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x