Published : 03 Jul 2018 09:31 PM
Last Updated : 03 Jul 2018 09:31 PM

ஆம் ஆத்மி அரசா? ஆளுநரா? டெல்லியில் யாருக்கு அதிகாரம்; உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு?

யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் காட்டிலும், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநருக்குத்தான் அதிகாரம் அதிகம் என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக ஆம் ஆத்மி அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நாளை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில் நாளை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், மத்திய அரசின் துணை நிலை ஆளுநர்தான் பெரும்பாலான நியமனங்கள், முடிவுகளை எடுத்து வந்தார். இதனால், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது.

அமைச்சரவை எடுக்கும் எந்த முடிவையும் டெல்லி துணை ஆளுநர் செயல்படுத்த விடுவதில்லை. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறார் என்று ஆம் ஆத்மி அரசு குற்றம் சாட்டியது. இதனால், டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் இருக்கிறது என விளக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட்4-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் அரசியலமைப்புச் சட்டப்படி டெல்லியில் துணை நிலை ஆளுநர்தான் நிர்வாகத்தின் தலைவர். அமைச்சரவையின் பரிந்துரைப்படி, ஆலோசனைப்படி அவர் செயல்படலாம் எனத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், அசோக்பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு முன் நடந்தது.

அப்போது, ஆம் ஆத்மி கட்சி சார்பில் வாதிடுகையில், சட்டபூர்வ அங்கீகாரமும், நிர்வாக அதிகாரமும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் இருக்கிறது. முதல்வரும், அவர் தலைமையிலான அமைச்சர்களும், அமைச்சரவையும்தான் சட்டங்களை இயற்ற அதிகாரம் படைத்தது.

டெல்லியின் துணை நிலை ஆளுநர் பல்வேறு நிர்வாக ரீதியான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்துகிறார், இதனால் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசால் பணிகளை ஆற்ற முடியாமல் போகிறது என வாதிட்டனர்.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் பி.சிதம்பரம், கோபால் சுப்பிரமணியம், ராஜிவ் தவான், இந்திரா ஜெய்சிங் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். மத்தியஅரசு சார்பில் கூடுதல் சொலிட்டர் ஜெனரல் மனிந்தர் சிங் வாதாடினார். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x