Published : 07 Jul 2018 08:27 AM
Last Updated : 07 Jul 2018 08:27 AM
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட காவலர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்ஹாம் மாவட்டத்தில் உள்ள வெஹில் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாவீது அகமது (27). இவர் காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து வீடு திரும்பிய அவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். தகவலறிந்த போலீஸாரும், ராணுவத்தினரும், காவலரை தேடி வந்தனர். இந்நிலையில், ஜாவீது அகமதுவின் உடல், குண்டுக் காயங்களுடன் செபோரா பகுதியில் நேற்று மீட்கப்பட்டது. கடத்திச் சென்ற தீவிரவாதிகள், அவரை சுட்டுக் கொன்றிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீரில் கடந்த மாதம் ராணுவ வீரர் ஒருவரை தீவிரவாதிகள் கடத்திச் சென்று கொலை செய்தது குறிப்பிடத்தக் கது
ஆயுதக் குவியல்
பூஞ்ச் மாவட்டம் மேண்டார் வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு ராணுவத்தினர், தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், தீவிரவாதிகள் யாரும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இலை சருகுகள் குவிந்து கிடந்த ஒரு பகுதியை சந்தேகத்தின்பேரில் ராணுவத்தினர் தோண்டி பார்த்தனர். அங்கு ஏராளமான ஆயுதங்கள் இருந்தன. அங்கிருந்த 11 ஐஇடி வெடிகுண்டுகள், 2 ஏ.கே. 47 துப்பாக்கிகள், 3 கைத் துப்பாக்கிகள், 3 ராக்கெட் லாஞ்சர்கள், 4 சீன கையெறி வெடிகுண்டுகள், நூற்றுக்கணக்கான துப்பாக்கி தோட்டாக்கள் ஆகியவற்றை ராணுவத்தினர் பறிமுதல் செய்தனர். மேலும், பாகிஸ்தான் நாட்டின் ரொக்கப் பணமும் (இந்திய மதிப்பில் ரூ.16,500) கைப்பற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT