Published : 05 May 2025 05:52 AM
Last Updated : 05 May 2025 05:52 AM
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் போலீஸுக்கும், நாட்டுக்கும் சேவையாற்றவே பிறந்துள்ளேன் என்று ஸ்ரீநகரில் பணியாற்றும் போலீஸ் அதிகாரி உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர் இப்த்கார் அலி (45). இவர் ஜம்மு-காஷ்மீர் போலீஸில் பணியாற்றி வருகிறார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்ற இந்திய அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், ரஜவுரி, ஜம்மு மாவட்டங்களைச் சேர்ந்த 24 பேரை வெளியேற்ற ஜம்மு-காஷ்மீர் அரசு உத்தரவிட்டது. இதில் இப்த்கார் அலி மற்றும் அவரது குடும்பத்தாரும் அடங்குவர். இதையடுத்து அவர்கள் பஞ்சாப் எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தில் அலி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் இப்த்கார் அலி, அவரது குடும்பத்தாரை பாகிஸ்தானுக்கு அனுப்பவேண்டாம் என்று உத்தரவிட்டது. இதுகுறித்து இப்கார் அலி கூறியதாவது: நானும், என்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று கூறி எங்களை பஞ்சாப் எல்லைக்கு அழைத்துச் சென்றுவிட்டனர். நான் நீதிமன்றத்தை அணுகி எங்களுக்குச் சாதகமான உத்தரவை பெற்றோம்.
என்னுடைய பெற்றோர் பகுர் தின், பாத்திமா பீ ஆகியோர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு 1965-ம் ஆண்டு நடந்த போரின் போது சென்றனர். அங்கு 18 ஆண்டுகள் அகதிகள் முகாமில் இருந்த பின்னர் 1983-ல் மீண்டும் பூஞ்ச் மாவட்டத்துக்குத் திரும்பினர். எங்களை ஜம்மு-காஷ்மீர் அரசு, நிரந்தர இந்தியவாசிகளை அனுமதித்து சான்றிதழ் வழங்கியுள்ளது. ஆனால், இந்திய குடிமக்களாக மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை.
எங்களுக்கு சொந்தமான நிலத்தை, எங்களது தாய்மாமன் அபகரித்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் போலீஸுக்கும், நாட்டுக்கும் சேவையாற்றவே பிறந்துள்ளேன். நான் 27 ஆண்டுகளாக போலீஸில் பணியாற்றி விருதுகள், பதக்கங்களை பெற்றுள்ளேன். எங்களது மூதாதையர் இங்குள்ள சால்வா கிராமத்தில்தான் வசித்தனர். என் தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா ஆகிய அனைவரும் அந்த கிராமத்திலேயே இறந்தனர். அவர்களை இங்குதான் அடக்கம் செய்தோம்.
ஆனால், திடீரென எங்களை பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்று கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பலர் போலீஸிலும், ராணுவத்திலும் பணியாற்றியுள்ளனர். நான் கத்ரா பகுதியில் தற்போது பணியாற்றி வருகிறேன். மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்காக கத்ரா பகுதி மலையடிவாரத்தில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்குதான் எனது பணியைத் தொடர்கிறேன். நானும், எனது மனைவி, 3 குழந்தைகளும் இங்குதான் வசிப்போம்.
நான் இந்த நாட்டைச் சேர்ந்தவன் இல்லை என்று கூறுவதுதான் எனக்கு வலியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. நான் பாகிஸ்தானை சேர்ந்தவன் இல்லை. எனக்கு அங்கு யாரும் இல்லை. நான் இந்தியன்தான். இந்தியாதான் எனது தாய்நாடு. நான் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையை மனதார நேசிக்கிறேன். நாட்டுக்காக என் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT