Published : 03 Jul 2018 01:10 PM
Last Updated : 03 Jul 2018 01:10 PM

காஷ்மீரில் திடீர் திருப்பம்: மெகபூபாவுக்கு எதிராக அணி திரளும் மஜக எம்எல்ஏக்கள்- புதிய அரசு அமைக்க முயற்சி?

 காஷ்மீரில் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கு எதிராக மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். மெகபூபாவை ஓரம்கட்டி விட்டு, பாஜகவுடன் கூட்டணி அரசை அமைக்க அவர்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரில் 2014-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 87 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28 இடங்களும், பாஜகவுக்கு 25 இடங்களும், தேசிய மாநாட்டு கட்சிக்கு 15 இடங்களும், காங்கிரஸூக்கு 12 இடங்களும் கிடைத்தன. இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டு சிறிது காலம் குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்றது.பின்னர் நேர் எதிர் கொள்கைகளை கொண்ட மக்கள் ஜனநாயக கட்சியும், பாஜகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.

இருகட்சிகளுக்கும் இடையே பல முரண்பாடுகள், நெருக்கடிக்கு இடையே கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியுடனான கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக பாஜக கடந்த வாரம் அறிவித்தது. இதனால் மெகபூபா பதவி விலகினார். அங்கு தற்போது குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், மெகபூபா முப்திக்கு எதிராக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் போர்க்கொடி எழுப்பியுள்ளனர்.

மெகபூபாவின் குடும்ப ஆட்சி மற்றும் பேராசை காரணமாகவே கூட்டணி உடைந்து, ஆட்சி பறிபோனதாக அக்கட்சி தலைவர்கள் வெளிப்படையாக குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர்.முன்னாள் அமைச்சரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர்களில் ஒருவருமான அன்சார கூறுகையில் ‘‘ஜம்மு - காஷ்மீர் அரசை சரியான முறையில் வழிநடத்த மெகபூபா தவறி விட்டார். கட்சியிலும், ஆட்சி நிர்வாகத்திலும் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இதனால் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.இதுபோலவே, அந்த கட்சியைச் சேர்ந்த மேலும் இரு எம்எல்ஏக்களும் மெகபூபாவுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளனர். மெகபூபா சுயநலத்திற்காக கூட்டணி அரசை பலிகொடுத்துள்ளார் என மக்கள் ஜனநாயக கட்சி எம்எல்ஏ முகமது அப்பாஸ் வானி புகார் கூறியுள்ளார். மக்கள் ஜனநாயக கட்சி எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து கட்சித் தலைமைக்கு எதிராக குரல் கொடுத்து வருவதால் அங்கு அரசியல் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

மெகபூபாவை ஒரம்கட்டி விட்டு பாஜகவுடன் இணைந்து மீண்டும் கூட்டணி அரசு அமைக்க மக்கள் ஜனநாயக கட்சி தலைவர்கள் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காக மக்கள் ஜனநாயக கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவை திரட்டி வருகின்றனர். போதிய எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தால் காஷ்மீரில் மீண்டும் கூட்டணி அரசு அமையலாம் எனத் தெரிகிறது. மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x