Published : 24 Apr 2014 05:37 PM
Last Updated : 24 Apr 2014 05:37 PM
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் சொத்துகளை கணக்கிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு கணக்கு தணிக்கைக்கு உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
பத்மநாபசுவாமி கோயிலை திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு நிர்வகிக்கும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், முன்னாள் கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் பத்மநாபசுவாமி கோயில் சொத்துகளை தணிக்கை செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, ஏ.கே.பட்நாயக் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
வழக்கு பின்னணி:
பத்மநாபசுவாமி கோயிலின் நிலவரம் குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள விவரங்கள் அதிர்ச்சி அளிப்பதாக உச்ச நீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்தது.
உச்ச நீதிமன்றம் சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், கோயிலில் 35 நாள்கள் ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பித்தது.
அறிக்கையை சமர்ப்பித்து வாதிட்ட வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், கோயிலில் ஏ, பி, சி, டி, இ, எஃப் என ஆறு அறைகளில் உள்ள பொக்கிஷங்கள் கணக்கிடப்பட்டு வருகின்றன. இதில் ஒரு அறை முறையாக மூடி சீல் வைக்கப் படவில்லை. உண்டியல்களை 45 நாட்களுக்கு ஒருமுறை திறக்கின்றனர். இதை மூன்று நாட்களுக்கு ஒருமுறை திறக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
நீதிபதிகள் லோதா, பட்னாயக் அடங்கிய அமர்வு, “கோவில் நிலவரம் குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கை கவலை அளிக்கிறது. இதில் தேவையான உத்தரவுகளை பிறப்பிப்பது அவசியம்,” என கூறியிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பத்மநாபசுவாமி கோயில் சொத்துகளை கணக்கிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் சிறப்பு கணக்கு தணிக்கைக்கு உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT