சத்தீஸ்கர் | பாதுகாப்பு படையினருடனான மோதலில் 31 நக்சல்கள் சுட்டுக்கொலை

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

பிஜாபூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜாபூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 31 நக்சலைட்டுகள் உயிரிழந்துள்ளனர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படை வீரர்கள் இரண்டுபேர் வீரமரணம் அடைந்ததாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "உயிரிந்த பாதுகாப்பு படை வீரர்கள் இருவரில் ஒருவர் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் படையைச் சேர்ந்தவர். மற்றொருவர் சிறப்புப் பணிக்குழுவைச் சேர்ந்தவர்.

இந்திராவதி தேசிய பூங்கா பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் இன்று காலை, பல்வேறு பாதுகாப்பு குழுக்களைச் சேர்ந்த வீரர்கள் இணைந்து நடத்திய கூட்டு நக்சல்கள் தேடுதல் வேட்டையின் போது இந்த துப்பாக்கிச் சண்டை நடந்தது.

முதல்கட்ட தகவலின் படி, 31 நக்சல்கள் இந்த துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர். அவர்கள் அனைவரது உடல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன" என்று தெரிவித்தார்.

துப்பாக்கிச் சண்டை நடந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. காயமடைந்த பாதுகாப்பு படைவீரர்கள் ஆபத்தான கட்டத்தை கடந்து விட்டதாகவும், சிறப்பான சிகிச்சைக்காக அவர்கள் வேறு மருத்துவனைக்கு மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தப் பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in