முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜாவை பிப்.14 வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை

பூஜா கேத்கர் | கோப்புப்படம்
பூஜா கேத்கர் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: சிவில் சர்வீஸ் தேர்வில் ஓபிசி இடஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியது, பார்வைத் திறன் குறைபாடு மற்றும் மூளைத்திறன் குறைபாடு இருப்பதாக பொய்யான தகவலை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் மீது பிப்ரவரி 14-ம் தேதி வரை கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூஜா கேத்கர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் சதீஸ் சந்திர ஷர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, பிப்ரவரி 14-ம் தேதி வரை பூஜா கேத்கர் மீது எந்த கட்டாய நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக அறிக்கை அளிக்க டெல்லி அரசு மற்றும் யுபிஎஸ்சி-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை பிப்ரவரி 14-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருக்கிறது.

முன்னதாக, டெல்லி உயர் நீதிமன்றம் பூஜாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்திருந்தது. அவர் மீதான குற்றச்சாட்டு ஓர் அதிகாரிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கு எதிராக செய்யப்பட்ட மோசடிக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவு தவறானது என்று கூறி பூஜா கேத்கர் ஜாமீனுக்காக உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது கவனிக்கத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in