‘இரு மடங்கு கடன் வசூல்’ - நிதி அமைச்சரின் அறிக்கையை சுட்டிக்காட்டி விஜய் மல்லையா ட்வீட்

விஜய் மல்லையா
விஜய் மல்லையா
Updated on
1 min read

சென்னை: வங்கி​களில் பல்லா​யிரக்​கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, வெளி​நாட்டு​க்கு கடந்த 2016-ல் தப்பியோடிய தொழிலதிபர் விஜய் மல்லை​யா​வின் சொத்துகளை விற்று அவர் கடன் வாங்கி​யிருந்த வங்கி​களுக்கு ரூ.14,131.6 கோடி திருப்பி அளிக்​கப்​பட்டது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தெரிவித்தார். அதை சுட்டிக்காட்டி தன்னிடமிருந்து இரு மடங்கு கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வட்டியுடன் சேர்த்து மொத்த கடன் ரூ.6,203 என கடன் மீட்பு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் அமலாக்கத் துறை மூலம் வங்கிகள் என்னிடம் இருந்து ரூ.14,131.60 கோடியை வசூலித்துள்ளது. என்னை இன்னும் ஒரு பொருளாதார குற்றவாளி என்றே நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் குறிப்பிடுகிறார். என்னிடமிருந்து அமலாக்கத் துறை மற்றும் வங்கிகள் இரண்டு மடங்கு கடனை எப்படி எடுத்தார்கள் என்பதை சட்டபூர்வமாக நியாயப்படுத்த முடியாவிட்டால், அது தொடர்பாக நிவாரணம் கோர எனக்கு உரிமை உண்டு.” என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, பிரபல தொழில​திபர் விஜய் மல்லையா, வைர வியாபாரிகள் நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வங்கி​களில் பல்லா​யிரக்​கணக்கான கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு, வெளி​நாடு​களுக்கு தப்பியோடினர். அவர்களுடைய சொத்துகள் முடக்​கப்​பட்டன. இந்நிலை​யில், மக்களவை​யில் துணை மானிய கோரிக்கை​களின் மீதான விவாதத்​தின் போது, நிதியமைச்சர் நிர்மலா சீதா​ராமன் பதில் அளிக்கை​யில் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட பலருடைய சொத்துகளை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்​தின் கீழ், அமலாக்கத் துறை மீட்டு உரிய​வர்​களிடம் ஒப்படைத்துள்​ளது. சட்ட​ விரோத பணப் பரிவர்த்தனை தடை சட்டத்​தின் 8 (7) மற்றும் (8) பிரிவுகளை அமலாக்கத் துறை சிறப்பாக கையாண்டு சொத்துகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்​துள்ளது. அவற்றின் மதிப்பு ரூ.22,280 கோடி​யாகும். அதில், விஜய் மல்லை​யா​வின் சொத்துகளை விற்று அவர் கடன் வாங்கியிருந்த வங்கி​களுக்கு திருப்பி அளிக்​கப்​பட்ட ரூ.14,000 கோடி​யும் அடங்​கும். அத்துடன் வைர வியாபாரி நீரவ் மோடி​யின் சொத்துகளை விற்று ரூ.1,053 கோடி வங்கி​களுக்கு திருப்பி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

அத்துடன், பஞ்சாப் நேஷனல் வங்கி​யில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி​விட்டு வெளி​நாடு தப்பியோடிய மற்றொரு வைர வியாபாரி மெகுல் சோக்சியின் சொத்துகளை விற்க அனுமதி கோரி வங்கி​களும் அமலாக்கத் துறை​யும் இணைந்து மும்பை சிறப்பு நீதி​மன்​றத்தை அணுகி​யுள்ளன. அந்த மனுவை விசா​ரித்த நீதி​மன்​றம், சோக்​சி​யின் சொத்துகளை மதிப்​பிட்டு ஏலம் விடவும், அதில் வரும் தொகையை பஞ்சாப் நேஷனல் வங்கியில் டெபாசிட் செய்​யவும் உத்​தர​விட்​டுள்​ளது. இவ்​வாறு அவர் கூறினார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in