Published : 25 Jun 2018 08:04 AM
Last Updated : 25 Jun 2018 08:04 AM

போர் விமானியானார் டீக்கடைக்காரர் மகள்

மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த டீக்கடைக்காரரின் மகள் இந்திய விமானப் படையின் போர் விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய விமானப் படையின் போர் விமானிக்கான தேர்வு அண்மையில் நடைபெற்றது. நாடு முழுவதும் இந்த தேர்வை 6 லட்சம் பேர் எழுதினர். கடந்த 7-ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 22 பேர் போர் விமானி பணிக்குத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஆன்சல் கங்க்வாலும் (24) ஒருவர்.

ஆன்சலின் தந்தை சுரேஷ், ம.பி.யின் நீமுச் பஸ் நிலையத்தில் டீக்கடை நடத்தி வருகிறார். அவர் கூறியபோது, “எனது மகளின் படிப்பு, போட்டித் தேர்வுகளுக்காக கடன் வாங்கி படிக்க வைத்தேன். எனது முயற்சி வீண் போகவில்லை. எனது மகள் போர் விமானி பணிக்கு தேர்வானதால் எனது டீக்கடை பிரபலமாகிவிட்டது” என்றார்.

ஆன்சல் கங்க்வால் கூறும்போது, ‘‘பள்ளி, கல்லூரி படிப்பின்போது விளையாட்டுகளில் ஆர்வமாக பங்கேற்பேன். கூடைப்பந்து, 400 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் பரிசுகளைப் வென்றுள்ளேன். கல்லூரி படிப்புக்குப் பிறகு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் வெற்றி பெற்று பயிற்சியில் சேர்ந்தேன். ஆனால் விமான படையில் சேர வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். எனவே மிகக் கடினமாக உழைத்து இப்போது போர் விமானி பணிக்கு தேர்வு பெற்றுள்ளேன்’’ என்றார்.

மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் உட்பட பல்வேறு தலைவர்கள் ஆன்சலுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் வரும் 30-ம் தேதி ஆன்சல் பணியில் சேருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x