Last Updated : 17 Jun, 2018 09:09 AM

 

Published : 17 Jun 2018 09:09 AM
Last Updated : 17 Jun 2018 09:09 AM

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால்100 அடியை நெருங்கிய கிருஷ்ணராஜசாகர் அணை : கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு குறைப்பு

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன‌மழை பெய்து வரும் நிலையில், கிருஷ்ணராஜ சாகர் அணை நீர்மட்டம் 100 அடியை நெருங்கியது. அதேபோல் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட நீரின் அளவு 36 ஆயிரம் கனஅடியில் இருந்து 15 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணை நிரம்புவது தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கடந்த மே மாத இறுதியில் தொடங்கிய தென் மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் காவிரியின் முக்கிய‌ நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, தலக்காவிரி, பாகமண்டலா, மடிகேரி உள்ளிட்ட இடங்களில் பலத்த ம‌ழை பெய்து வருவதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் தலக்காவிரி, பாகமண்டலா ஆகிய இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள் ளன.

குடகு, மைசூரு ஆகிய‌ மாவட்ட‌ங்களின் மலைப்பகுதிகளில் தொடரும் கனமழையால் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேபோல கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்வ தால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு கணிச மான அளவில் நீர் வந்து கொண் டிருக்கிறது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, குடகு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2859 அடி உயரத்தில் உள்ள‌ ஹாரங்கி அணையின் நீர்மட்டம் 2829.18 அடியாக உயர்ந்திருக்கிறது. இந்த அணைக்கு விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 30 கனஅடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. இதேபோல கடல் மட்டத்தில் இருந்து 2922 அடி உயரத்தில் உள்ள ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2894.30 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 18,242 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 200 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

மண்டியா மாவட்டத்தில் 124.80 அடி உயரமுள்ள‌ கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 94.53 அடியில் இருந்து 99.20 அடியாக உயர்ந்திருக்கிறது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 28,096 கனஅடியில் இருந்து 31,037 கன அடியாக அதிகரித்திருக்கிறது. இதனால் அணையில் இருந்து 437 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் 67.28 அடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு நீர் மட்டம் 100 அடி யை நெருங்கியதால் விவசாயி கள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர்.

நீரின் அளவு குறைப்பு

மைசூரு மாவட்டத்தில் கடல் மட்டத்தில் இருந்து 2284 அடி உயரத்தில் உள்ள கபினி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 2281.50 அடியாக இருந்த நிலை யில் சனிக்கிழமை 2280.50 அடி யாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 36,650 கனஅடியில் இருந்து 33,153 அடியாக குறைந்துள்ளது. இத னால் நேற்று காலையில் தமிழகத்துக்கு 36,000 கன அடி நீர் திறக்க‌ப்பட்ட நிலையில், மாலையில் 15,000 கனஅடியாக குறைக்கப் பட்டது.

க‌பினி அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதால் தமிழக எல்லையில் உள்ள‌ பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து கணிசமாக குறைந்தது. இதனால் ஒகேனேக்கல் மூலம் விரைவில் மேட் டூர் அணைக்கு செல்லும் நீரின் அளவு கணிசமாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே கபினி அணை முழு கொள்ளளவை எட்டிய பின்னர், தமிழகத்துக்கு அதிகளவில் நீர் திறக்கப்படும் என காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x