Published : 29 Jun 2018 08:31 AM
Last Updated : 29 Jun 2018 08:31 AM
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் வீட்டில் தலைமைச் செயலாளர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் உண்மையான நேரத்தைவிட அங்கிருந்த சிசிடிவி கேமராக்களின் நேரம் 40 நிமிடம் தாமதமாக இருப்பதை தடயவியல் அறிக்கை உறுதி செய்துள்ளது.
முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் அரசு இல்லத்தில் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி இரவு நடைபெற்ற கூட்டத்தில், தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. கேஜ்ரிவால் முன்னிலையிலேயே இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த டெல்லி போலீஸார், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அமனதுல்லா கான் மற்றும் பிரகாஷ் ஜார்வாலை கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக கேஜ்ரிவால், அவரது முன்னாள் ஆலோசகர் வி.கே.ஜெயின், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, 11 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் உட்பட கூட்டத்தில் பங்கேற்ற அனைவரிடமும் விசாரணை நடத்தினர்.
இதுதவிர, கேஜ்ரிவால் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதனுடன் இணைந்த கணினி ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை பிப்ரவரி 23-ம் தேதி கைப்பற்றி ஆய்வு செய்தனர். மொத்தம் உள்ள 14 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், அதில் 7 வேலை செய்யவில்லை என தெரியவந்தது.
மேலும் பிரகாஷ் மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படும் உண்மையான நேரத்தைவிட கேமராக்களில் பதிவான நேரம் 40 நிமிடங்கள் பிந்தி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த கேமராக்களை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த சோதனையிலும் 40 நிமிட நேர வித்தியாயம் இருப்பதை தடயவியல் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.
அதேநேரம், சம்பவ நாளில் சிசிடிவி கேமராவில் முறைகேடு நடந்ததாகவோ அல்லது நேரம் மாற்றி அமைக்கப்பட்டதாகவோ தடயவியல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இதையடுத்து, இந்த வழக்கில் போலீஸார் விரைவில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT