Published : 15 Jun 2018 08:54 AM
Last Updated : 15 Jun 2018 08:54 AM

திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளத்தில் 4 பேர் பலி: 14 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவிப்பு

திரிபுரா, மணிப்பூர், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 14 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.

திரிபுரா, மணிப்பூர், அசாம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. திரிபுரா மாநிலத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள 3,500-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளம் காரணமாக அங்கு சாலை, ரயில் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவுப்பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, திரிபுராவில் உள்ள கோவாய் மாவட்டத்தைச் சேர்ந்த 2 விவசாயிகள் நேற்று வெள்ளத்தில் உயிரிழந்தனர். வெள்ளம் பாதித்த பகுதிகளை மாநில முதல்வர் விப்லவ் குமார் தேவ் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.

மணிப்பூர், மிசோரம், அசாம் மாநிலங்களிலும் தொடர் மழை காரணமாக ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மணிப்பூரில் நேற்று வெள்ளத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் 14 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x