Published : 14 Jun 2018 08:05 AM
Last Updated : 14 Jun 2018 08:05 AM
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உயிருடன் உள்ள நாய் ஒன்றின் மீது தாரை கொட்டி சாலை அமைத்த கட்டுமானப் பணியாளர்களின் அலட்சியப் போக்கிற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஆக்ராவில் சையது கிராஸிங் என்ற இடத்திலிருந்து சர்க்கியூட் ஹவுஸ் மற்றும் தாஜ்மகால் நோக்கி சாலையில் புதிதாக தார் கொட்டி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த நாய் ஒன்றை கட்டுமானத் தொழிலாளர்கள் விரட்டாமல், அதன் மீது கொதிக்கும் தாரை ஊற்றி ரோடு ரோலர் மூலம் நசுக்கி கொன்று விட்டதாக புகார் எழுந்துள்ளது.
சாலையில் பாதியளவு புதையுண்டிருந்த நாயின் புகைப்படம் சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. ஏராளமானோர், சாலை கட்டுமான நிறுவனம் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக தங்களின் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். மேலும் இச்செயலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
இதனிடையே நாயை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆக்ராவின் சதார் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, காவல் நிலையத்தில் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக காவல் நிலைய அதிகாரி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT