Published : 10 May 2018 07:03 AM
Last Updated : 10 May 2018 07:03 AM

மேலவைத் தேர்தலில் வேட்பாளர் வெற்றி பெற லஞ்சம்; ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறைக்கு செல்வது உறுதி: ஒய்எஸ்ஆர் கட்சி எம்.எல்.ஏ. ரோஜா கருத்து

தெலங்கானாவில் நடந்த மேலவை உறுப்பினர் தேர்தலில், தெலுங்கு தேச வேட்பாளர் வெற்றி பெற வேண்டி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறைக்கு செல்வது உறுதி என ஒய்எஸ்ஆர் கட்சி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் ரோஜா நேற்று கூறியதாவது:

தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற மேலவை உறுப்பினர் தேர்தலில், தனது தெலுங்கு தேச கட்சி வேட்பாளரை வெற்றிபெற செய்வதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ரூ.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த வழக்கில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசிய ஆடியோவின் அடிப்படையில் அவர்தான் குற்றவாளி என்பதை அனைவரும் அறிவார்கள்.

ஆனால், அதனை நான் பேசவில்லை என சந்திரபாபு நாயுடு கூறுவது வேடிக்கையாக உள்ளது. இவ்வழக்கு தற்போது மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. இதில், குற்றவாளியாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிறைக்கு செல்வது உறுதி.

கடந்த 4 ஆண்டுகளில், ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துள்ளது. இதனை சந்திரபாபு நாயுடு கண்டுகொள்ளவில்லை. ஆனால், தற்போது திடீரென பெண்களுக்கு ஆதரவாக அவர் பேசுவதும், நஷ்ட ஈடு வழங்குவதும் கண் துடைப்பு நாடகமாகும். இவ்வாறு ரோஜா கூறினார்.

அமைச்சர் பதிலடி

இந்நிலையில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விமர்சித்தது தொடர்பாக நடிகை ரோஜாவுக்கு, ஆந்திர மாநில பால் வளத்துறை அமைச்சர் ஆதிநாராயண ரெட்டி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “சுயவிளம்பரம் செய்து கொள்வதற்காகவே முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது ரோஜா குற்றம்சாட்டி வருகிறார். எனவே, ரோஜா அரசியலை விட்டு விலகி, சினிமா, சின்னத்திரைகளில் நடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x