Published : 11 May 2018 09:03 PM
Last Updated : 11 May 2018 09:03 PM
உத்தரபிரதேசத்தில் சிறுமி பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீதான குற்றச்சாட்டினை சிபிஐ உறுதி செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தன்னை பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏவான குல்தீப் சிங் செங்கார், பலாத்காரம் செய்ததாகவும் மிரட்டுவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து தகவலறிந்த எம்எல்ஏ குல்தீப் சிங்கின் ஆதரவாளர்கள், புகாரை திரும்பப் பெறக் கோரி, சிறுமியின் தந்தை பப்பு சிங்கை கடுமையாக தாக்கினர்.
ஆனால், அங்கு வந்த போலீஸார், தாக்குதலில் படுகாயமடைந்த பப்பு சிங்கை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, சில நாட்களிலேயே சிறைக்குள் பப்பு சிங் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, எம்எல்ஏ குல்தீப் சிங், அவரது உதவியாளர் சாஷி சிங் உள்ளிட்டோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்நிலையில், எம்எல்ஏ குல்தீப் சிங் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ உறுதி செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சிபிஐ உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
எம்எல்ஏ குல்தீப் சிங் மீது சிறுமி கூறியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த வழக்கில் குல்தீப் சிங்கை காப்பாற்றுவதற்காக போலீஸார் பல முறைகேடுகளில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான சிறுமியின் வாக்குமூலத்தை நீதிபதியின் முன்னிலையில் சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இந்த பலாத்கார வழக்கைப் பயன்படுத்தி சிபிஐ அதிகாரிகள் போல நடித்து, குல்தீப் சிங்கின் மனைவியிடம் ரூ.1 கோடி பணம் பறிக்க முயன்ற இருவரை போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT