Published : 16 May 2018 07:27 AM
Last Updated : 16 May 2018 07:27 AM
லோக்பால் தேர்வு கமிட்டியின் சட்ட நிபுணராக முகுல் ரோத்கி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதா கடந்த 2013-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு 2014 ஜனவரியில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். ஆனால் இன்றுவரை லோக்பால் அமைக்கப்படவில்லை.
லோக்பாலில் இடம்பெறுபவர்களை தேர்வு செய்ய கமிட்டி அமைக்கப்பட வேண்டும். இதில் பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்ட நிபுணர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் இடம்பெற வேண்டும். இந்த தேர்வு கமிட்டியில் சட்ட நிபுணராக நியமிக்கப்பட்டிருந்த மூத்த வழக்கறிஞர் பி.பி.ராவ் கடந்த 2017 ஜூனில் காலமானார்.
இதனிடையே லோக்பால் அமைப்பை அமைக்கக் கோரி ‘காமன் காஸ்’ என்ற தன்னார்வ தொண்டு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜரானார். அவர் கூறியபோது, “லோக்பால் அமைப்பின் சட்ட நிபுணராக முகுல் ரோத்கி நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்தார். வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2014-ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்றபோது அட்டர்னி ஜெனரலாக முகுல் ரோத்கி பொறுப்பேற்றார். கடந்த 2017 ஜூனில் அவர் பதவியை ராஜினாமா செய்தார். தற்போது அவர் லோக்பால் சட்ட நிபுணராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT