Published : 19 May 2018 02:13 PM
Last Updated : 19 May 2018 02:13 PM

வெல்வாரா?- வீழ்வாரா?- கடந்த 11 ஆண்டுகளில் எடியூரப்பா சந்திக்கும் 5-வது நம்பிக்கை வாக்கெடுப்பு

பாஜக சார்பில் முதல்வராகப் பதவி ஏற்றுள்ள பி.எஸ். எடியூரப்பா கடந்த 11 ஆண்டுகளில் சந்திக்கும் 5-வது நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று மாலை சந்திக்கிறார்.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், 104 எம்எல்ஏக்களுடன் தனிப்பெரும் கட்சியாக வந்த பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்றார். எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்றதை எதிர்த்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று மாலை 4 மணிக்குள் எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சட்டப்பேரவையில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

221 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில், பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க 111 எம்எல்ஏக்கள் தேவை. தற்போது பாஜகவிடம் 104 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில், எடியூரப்பா கடந்த 11 ஆண்டுகளில் 5-வது நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ள உள்ளார். இதற்கு முன் கடந்த 2007-ம் ஆண்டு எடியூரப்பாவுக்கு ஆதரவு அளித்த கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் திடீரென ஆதரவை திரும்பப் பெற்றது. இதனால், 8 நாட்களில் எடியூரப்பா ஆட்சி கவிழ்ந்தது.

அதன்பின் 6 மாதங்கள் குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப்பின் 2008-ம் ஆண்டு மீண்டும் எடியூரப்பா முதல்வராகப் பதவி ஏற்று தென் மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது.

2008-ம் ஆண்டு முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்கும் பாஜகவுக்கு 3 எம்எல்ஏக்கள் குறைவாக இருந்தது. இதையடுத்து ஆளுநர் ராமேஸ்வர் தாக்கூர் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். அப்போது ஆப்ரேஷன் கமலாவைத் தொடங்கிய பாஜக 2-வது நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

3-வது நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம், ஆளுநர் பரத்வாஜ் இருக்கும் போது கொண்டு வரப்பட்டது. 18 எம்எல்ஏக்கள் திடீரென ஆதரவை பாஜக அரசுக்கு வாபஸ் பெற்றனர். அப்போது இடைக்கால சபாநாயகராக இருந்த போபையா 11 பாஜக எம்எல்ஏக்களையும், 5 சுயேட்சை எம்எல்ஏக்களையும் டிஸ்மிஸ் செய்தார். அதன்பின் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு குரல் வாக்கெடுப்பின் மூலம் நடத்தப்பட்டு அதில் பாஜக அரசு வெற்றி பெற்றது.

கடந்த 2010-ம் ஆண்டு, அக்டோபர் 14-ம் தேதி எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் பரத்வாஜ் உத்தரவிட்டார். ஆனால், அதில் எடியூரப்பா தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், எடியூரப்பா தனது 5-வது நம்பிக்கை வாக்கெடுப்பை இன்று சந்திக்கிறார். இதுவரை 4 நம்பிக்கை வாக்கெடுப்புகளில் எடியூரப்பா 3 முறை வென்றுள்ளார், ஒன்றில் தோற்று ஆட்சி இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x