Published : 13 May 2018 09:43 AM
Last Updated : 13 May 2018 09:43 AM
விபத்துகளைத் தவிர்க்க விமானங்களில் இருப்பது போல் ரயில்களிலும் கருப்புப்பெட்டிகள் பொருத்தப்படவுள்ளன.
கருப்புப் பெட்டிகள் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ரயில் பெட்டிகளில் இந்த கருப்புப் பெட்டிகள் பொருத்தப்படவுள்ளன.
ரயில் விபத்துகளைத் தவிர்ப்பதற்கான இந்த நடவடிக்கையை இந்திய ரயில்வே எடுத்துள்ளது. இதுகுறித்து ரேபரேலி ரயில் பெட்டித் தொழிற்சாலையின் முதன்மை டிசைன் என்ஜினீயர் இந்திரஜித் சிங் கூறும்போது, “தற்போது எங்களது தொழிற்சாலையில் ஸ்மார்ட் ரயில் கோச்சஸ் என்ற நவீனமயமான பொலிவுறு ரயில் பெட்டிகளைத் தயாரித்துள்ளோம். இந்த வகை பெட்டிகளில்தான் இந்த கருப்புப் பெட்டிகள் பொருத்தப்படுகின்றன. வழக்கமாக விமானங்களில் பொருத்தப்படும் கருப்புப் பெட்டிகள் விமானி அறையில் நடப்பவற்றை பதிவு செய்துகொள்ளும். ஆனால் ரயில்களில் பொருத்தப்படும் இந்த கருப்புப் பெட்டிகள் விபத்துகளைத் தவிர்க்கும். மேலும் ரயில்கள் தடம்புரள்வதையும் தவிர்க்கும்.
பல்வேறு விதங்களில் இந்த கருப்புப் பெட்டியானது விபத்துகளைத் தவிர்க்கும். ரயில் பாதைகளில் சேதம், இருப்புப் பாதை உடைதல், மின் கசிவு உள்ளிட்ட பலவற்றை அறிந்து முன்னதாகவே தகவல் தந்து ரயிலை நிறுத்திவிடும். மேலும் ரயில் பெட்டிகளில் ஏ.சி. வசதி பழுதானால், உடனடியாக தகவல் தரும்.
இந்த வகை பெட்டிகளில் கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகள் தகவல் பலகை, வை-பை வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன” என்றார்.
முன்னதாக இந்த ரயில் பெட்டிகளை ரே பரேலி ரயில் பெட்டி தொழிற்சாலையின் பொது மேலாளர் ராஜேஷ் அகர்வால் தொடங்கிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT