Published : 01 May 2018 02:27 PM
Last Updated : 01 May 2018 02:27 PM
உ.பி.யில் மதரஸாவில் சிறைவைக்கப்பட்டிருந்த சிறுமியை பலாத்காரம் செய்த புகாரில் அதன் மவுலானா போலீஸாரால் பிடிக்கப்பட்டிருந்தார். அவர் மீதான புகார் உறுதி செய்யப்பட்டு மவுலானா நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு உதவியாக இருந்ததாக மதரஸா மாணவர் சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த செய்தி கடந்த ஏப்ரல் 27 அன்று ‘தி இந்து’வில் வெளியாகி இருந்தது.
டெல்லியின் கிழக்குப்பகுதியில் உள்ள காஜிபூரில் இருந்து கடந்த 21-ம் தேதி ஒரு 11 வயது சிறுமி காணாமல் போனார். பிறகு இவரை அவரது குடும்பத்திற்கு பழக்கமான 12 வயது சிறுவனுடன் கடைதெருக்களில் பேசிக்கொண்டிருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. பிறகு இந்த சிறுமியை அந்த சிறுவன் தான் பயிலும் பயிலும் காஜியாபாத்தில் உள்ள மதரஸாவில் அழைத்துச் சென்று விட்டதாகக் கூறப்பட்டது.
இந்த தகவல் மறுநாள் 22 ஆம் தேதி இரவு உ.பி.யின் சாஹிபாபாத் காவல் நிலையத்திற்கு கிடைத்துள்ளது. இதை அடுத்து அக்காவல்படையினர் காஜியாபாத்தின் அர்த்தாலா பகுதியில் உள்ள ஒரு மதரஸாவில் திடீர் சோதனை நடத்தினர். அதில், பூட்டிய அறையில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாகப் புகார் கூறப்பட்டது.
இந்த சிறுமி பிரிவு 164-ன்படி மாஜிஸ்திரேட் முன் வாக்குமூலம் அளித்தார். அதில் அவர் மதராஸாவின் மவுலானா குலாம் ஷாஹீத் தம்மை தொடக்கூடாத பல இடங்களில் அவ்வப்போது வந்து தொட்டு தொல்லை தந்ததாகக் கூறியுள்ளார். இவருடன் மற்ற சிலரும் வந்திருந்து பாலியல் தொல்லை அளித்ததாகவும் அந்த சிறுமி புகார் கூறியுள்ளார். இதனால், அந்த மவுலானா காஜியாபாத் போலீஸாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
பிறகு நெருக்கடிக்கு உள்ளான உ.பி. போலீஸ் சிறுமி வழக்கை சிறப்புப் பிரிவு காவல்துறைக்கு மாற்றியது. தனது விசாரணையைத் தொடங்கிய சிறப்புப் பிரிவினர் பிரிவு 4 போஸ்கோ சட்டத்தில் நேற்று மவுலானா மீது வழக்குப் பதிவு செய்தது, பிறகு குலாம் ஷாஹீதை கைது செய்து சிறையில் தள்ளியுள்ளது.
மாணவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை அரசு சிறுவர் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் மருத்துவ சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதன் மருத்துவ அறிக்கை கிடைத்த பின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர உள்ளது.
முன்னதாக, அப்பகுதியின் ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தளம் உள்ளிட்ட இந்து அமைப்பினருடன் பாஜக 23 ஆம் தேதி இரவு கண்டன ஊர்வலம் நடத்தினர். இதில் மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அதேசமயம் பாஜகவின் கிழக்கு தொகுதி எம்.பி. மற்றும் மாவட்ட தலைவர் மனோஜ் திவாரி, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT